வெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர
மைல் பரப்பளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக வந்திறங்கினால்
ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் உளவு அளவுக்கு பயிர்களை சாப்பிடக்
கூடியது. இந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து
தங்களது விளைநிலங்களை சூறையாடி வருகின்றன.
இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பருவமழைக்கு
பிந்தைய பசுமையான வயல்களில் பல்கிப் பெருகிய இந்த வெட்டுக்கிளிகள் ஏமன்
வழியாக ஈரானுக்குள் நுழைந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. பின்பு
அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று தங்களது படையை இன்னும் விஸ்தரித்து
இம்மாதத் தொடக்கத்தில் எல்லை தாண்டி ராஜஸ்தான் வழியாக இந்தியாவிற்குள்
நுழைந்தன.
வெட்டுக்கிளிகள்
தொடக்கத்தில் எல்லையோர மாவட்டங்களில் பூ, காய், பழம், தண்டு என பயிர்களை
மொத்தமாக தின்று தீர்த்துக் கொண்டிருந்த இந்த வெட்டுக்கிளிகள் படிப்படியாக
முன்னேறி இன்று ராஜஸ்தானின் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் பாதி மாவட்டங்களை
ஆக்கிரமித்திருக்கின்றன.
ஜெய்ப்பூரில் குடியிருப்புகள் இவை வழியாக பறந்து சென்றதைப் பார்த்து நகரத்து மக்களே மிரண்டு போனார்கள்.
பூச்சி மருந்து அடித்து கொள்வதற்காக சிறப்பு வாகனங்கள்
பயன்படுத்தப்பட்டாலும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளை ஒழிக்க அதுபோதுமானதாக
இல்லை. ராஜஸ்தானில் 50 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள
நிலையில், இந்த வெட்டுக்கிளி கூட்டத்தில் ஒரு பிரிவு சத்தமே இல்லாமல்
மத்திய பிரதேசத்திற்குள் புகுந்துவிட்டது.
அங்கே சுமார் 3 கிலோ மீட்டர் அளவுக்கு பறக்கும் இந்த வெட்டுக்கிளிகள்
இதுவரை 16 மாவட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியிருக்கின்றன. வருவாய்,
தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கியமான அரசு துறைகளுக்கும் இவற்றை கொல்வதே
பெரும் தலைவலியாய் மாறியிருக்கிறது.
அடுத்தபடியாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்திலும்
வெட்டுக்கிளிகளின் தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பூச்சி மருந்துடன் தீயணைப்புத் துறையினர் தயாராக உள்ள
நிலையில், ராஜஸ்தானில் இருந்து வெட்டுக்கிளை ஒழிப்பு நிபுணர்களும்
வரவழைக்கப்ட்டுள்ளனர்.