கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காகச் சென்னையில் வசிப்பவர்கள்
தங்களது உடல்நிலை குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவிடுமாறு சென்னை
மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அதற்காக பிரத்யேக இணையதள
பக்கத்தையும் உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த
வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 3,839 ஆக
உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை மக்கள் தங்களது உடல்நிலை குறித்த விவரங்களை இணையதளம்
வாயிலாகத் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது
அதன்படி http://covid19.chennaicorporation.gov.in/c19/Symptoms/
என்ற இணையதள முகவரிக்குச் சென்று உடல்நிலை குறித்த விவரங்களைப் பதிவிடலாம்
என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.







