கண்களில் கனவிருக்கு
உனக்கென அடகுவைக்க
என் கழுத்தில் தலை இருக்கு''
என்னும் வரி கிராமத்து தகப்பன் பிள்ளைகளின் கல்வி குறித்த கனவின் வெளிப்பாடாக பிறந்த வரி.
தற்போது அமலான கல்விகொள்கை நிறைவேற்றுமா அல்லது பின்னுக்கு தள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியக் கல்வியை நவீனப்படுத்தும் பொருட்டு 1948ல் பல்கலைக் கழக ஆணையமும், 1952ல் இடைநிலைக் கல்வி ஆணையமும் அமைக்கப்பட்டது. முதல் கல்விக் கொள்கை 1968லும், அதன்பின் 1986ல் ராஜீவ் காந்தி காலத்திலும் கொண்டுவரப்பட்டது.
தற்போதைய தேசிய கல்விக் கொள்கை-2019 ஐ வரையறுக்க 2015-ல் ஸ்மிரிதி ராணி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது டாக்டர் சுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 2016ல் வெளியிடப்பட்டது.
இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கனால் இறுதிப்படுத்தப்பட்டு ஜூன் 2019ல் வெளியிடப்பட்டது. ஆறு மாதகாலம் நாடு முழுவதும் கருத்துக் கேட்கப்பட்டு 29-07-2020 மாலை மத்திய அரசு ஒப்புதலுடன் புதிய கல்வி கொள்கை அதிகாரப்பூர்வமாய் வெளியாகின. 34 ஆண்டுகளுக்குப் பின் கல்வித்துறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
#பள்ளிக்கல்வி
மாணவர்களின் 12 ஆண்டு கல்வி என்பது 1968ல் 5+3+2+2 என இருந்தது. பிறகு 1977-78ல் 10+2 என மாறியது. தற்போது புதிய கல்விக் கொள்கையில் 5+3+3+2 என வந்துள்ளது. அதாவது அடித்தள நிலை, ஆயத்தநிலை, நடுநிலை, உயர்நிலை என வரையறுக்கப் பட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்குள் தரமான மழலைக்கக்வி 3 முதல் 6 வயதுவரை கட்டணமற்ற கட்டாயக்கல்வி அளிக்க வகை செய்துள்ளது.1 முதல் 5 வகுப்புவரை எழுத்தறிவும் கணித அறிவும் கட்டாயமாகும்.
2030ம் ஆண்டிற்குள் 3-18 வயதுவரை அனைவருக்கும் இலவச தரமான கட்டாய கல்வியளிக்க கூறுகிறது. 5ம் வகுப்புவரை விரும்பினால் அல்லது 8ம் வகுப்பு வரை கட்டாயம் தாய்மொழி கல்வி இருக்கும்.
மும்மொழிக்கொள்கை நாடு முழுதும் அமல்படுத்தப்படும். ஆறாம் வகுப்பிலிருந்தே தொழில்கல்வி புகுத்தப்படும். பள்ளிகளில் டிஜிட்டல் மூலம் தொழில்நுட்பக் கல்வி வருவதால் இணையம் மூலம் கற்க வாய்ப்பு ஏற்படும். NCERT மூலம் நாடு முழுவதும் ஒரே பாடப் புத்தகம்.
ஒரே வளாகத்தில் அல்லது பள்ளித் தொகுப்புகளாக கல்வி நிலையங்கள் அமையும். பிரதமர் தலைமையிலான தேசிய கல்வி ஆணையமே இனி கல்வியின் பொறுப்பாளராக இருப்பர். ராஜ்ய சிக்ஷ் அயோக் எனும் இவ்வமைப்பை மாநில அளவிலும் அமைத்துக் கொள்ளலாம்.
மாநில கல்வி வாரியங்களின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இனி கல்வி அமைச்சகம் என மாறும்.
#ஆசிரியர்கள்
திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். தற்போதுள்ள இரண்டாண்டு பி.எட் படிப்பு சில காலம் வரை தொடரும். அதன் பின் நான்காண்டு படிப்பாகும்.
கற்பித்தல் சாரா செயல்பாடுகள் ஆசிரியர்களுக்கு இல்லாமல் கற்பித்தல் பணி மட்டுமே இருக்கும். பள்ளி மேலாண்மைக்குழு மேம்படுத்தப்படும். நாடு முழுவதும் பின்தங்கிய பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் நிறுவப்படும்.
ஒவ்வொரு பள்ளி வளாகமும் அரை தன்னாட்சி அலகாக இருக்கும்.(எல்.கே.ஜி முதல் 2 ,3முதல்5,5 முதல் 8, 9 முதல்12வரை வகுப்புகள்).
ஆசிரியர் மாணவர் விகிதம் 30:1 ஆக இருக்கும். சிறப்பு நிலைப் பகுதிகளில் 1:25 ஆக இருக்கும்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அதிகாரம் மிக்கவராய் இருப்பார். ஆசிரியர்களின் ஊக்கஊதியம், பதவி உயர்வு ஆகியவை தகுதி அடிப்படையில் அமையும். ஆசிரியர்கள் ஆண்டுக்கு CPD எனும் பயிற்சியில் குறைந்தது 50 மணி நேரம் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
#உயர்கல்வி
கல்லூரிகள் தன்னாட்சி அடிப்படையில் தற்சார்பு குழுவால் நிர்வகிக்கப்படும். பல்கலையின் கீழ் இருக்காது. UGCக்கு பதிலாக தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும். AICTE போன்றவை தொழில் நுட்ப தரத்தை வரையறுக்கும். ஆசிரியர் கல்வி 4 ஆண்டு இளங்கலை கல்வியியல் படிப்பாக்கப்படும். MBBS படிப்பு முதலிரண்டு ஆண்டுகள் அனைத்து அறிவியல் மாணாக்கர்களுக்கும் பொதுவான பருவமாக வடிவமைக்கப்படும். நீட்,எக்ஸிட் தேர்வு கட்டாயமாக்கப்படும்.
உயர்கல்வியில் இளங்கலை வகுப்பு 3 அல்லது 4 ஆண்டுகள் இருக்கும். இளங்கலை படிப்பிலும் ஆய்வுப்படிப்புகள் வரும். M.phil படிப்பு நிறுத்தப்படும். நேரடி ph.d படிப்பு அமலுக்கு வரும்.
உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கென,கல்வி கற்றுதருவதாக மட்டும் இருக்கும். கல்லூரிகளை கட்டுப்படுத்திட முடியாது. NAAC அங்கீகாரம் கட்டாயமாக்கப்படும். ஒரு மாணவன் கல்லூரியிலிருந்து முதல் ஆண்டில் வெளியேறினால் சான்றிதழும், இரண்டாம் ஆண்டில் வெளியேறினால் பட்டயமும், மூன்றாம் ஆண்டில் வெளியேறும்போது பட்டமும் வழங்கப்படும்.அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறையை நிறுத்தப்படும்.
தற்போதுள்ள நிகர்நிலை, இணைப்பு தொழில்நுட்ப பல்கலை பெயர்கள் இனி பல்கலைக்கழகம் என்று மட்டுமே இருக்கும்.2035 ம் ஆண்டுக்குள் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையை 50 சதவீதமாக்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
#குறைகள்
*மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளுக்கு தேசிய அளவிலான மொழி, கணிதத்தில் பரிசோதனை தேர்வுகள் (NAS, SLAS போல) நடத்தப்படும்.
*பொதுத்தேர்வு கிடையாது. ஒன்பதாம் வகுப்பிலேயே குரூப் தேர்ந்தெடுக்கும் முறை.
* 9 முதல் 12 ம் வகுப்பு வரை 8 செமஸ்டர்கள் தேர்வு எழுதவேண்டும். ஒவ்வொரு செமஸ்டருக்கும் 5 முதல் 6 பாடங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு 8 செமஸ்டருக்கு 40 தேர்வுகள் எழுத வேண்டும்.
* ஒரு வேளை தோல்வியடைந்தால் சிறப்பு வகுப்பு நடத்தி தேர்ச்சி பெற வைக்க வேண்டும். இது இடைநிற்றலை ஊக்குவிக்கும்.
*12ம் வகுப்பு முடித்தபின் தேசிய தேர்வு முகமை (National testing agency) மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் மூலம் மட்டுமே கல்லூரியில் இனி சேர முடியும்.
* தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். மேலும், அரசு- உதவும் மனப்பான்மை கொண்ட தனியார் அமைப்பு இணைந்து (philanthropic public partnership) நடத்தலாம்.
*மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை பிற பள்ளிகளோடு இணைத்தால் கிராமப்புற குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும்.
* இந்தியாவில் 40,000க்கும் மேல் கல்லூரிகள் இருந்தாலும் தன்னாட்சி கல்லூரிகள் 695 ஆகும். தமிழகத்தில் 191 கல்லூரிகள் இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் சொற்ப அளவில் இருக்கிறது. தற்போது அனைத்தும் தன்னாட்சி எனில் தரம் எப்படி இருக்கும்?
* திறந்த நிலை மற்றும் தொலை தொடர்பு கல்வியினை கல்லூரிகளே படிப்பும் சான்றிழும் வழங்கலாம்.
* GATS ஒப்பந்தப்படி அயலக பல்கலைக் கழகங்கள் இங்கு உள்ள நிறுவனங்களுடன் இணைந்து நடத்த UGC, AICTE முன்பு அனுமதிக்க வேண்டும். ஆனால், தற்போது தாராளமயமாக்கம் மூலம் எளிதில் நுழையும். இந்திய மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும் அபாயம் நிகழும்.
*அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வரும். அயல்நாட்டு மாணவர்களும் வருவதால் இந்திய மாணவர்களுக்கான வாய்ப்பு குறையும். இதில் இடஒதுக்கீடு கிடைக்குமா என்பது சந்தேகமே.
* மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் என்பது பள்ளி செயல்திறன், NTA test அடிப்படையில் மற்றும் சமூக பொருளாதார பின்னணியில் அமையும்.
*பள்ளி மேலாண்மை குழுவிற்கு அதிகாரமில்லை. மும்மொழித் திட்டத்தில் சமஸ்கிருதம் இருக்கும். எனினும் மாநில அரசுகளின் முடிவே இறுதியாகும்.
*கல்விக்காக ஜிடிபியில் 6% ஒதுக்கப்படும் என்றும் இது மத்திய மாநில அரசுகள் கூட்டாக ஒதுக்கிட வேண்டுமென்பதால் மாநிலங்களின் நிதிச்சுமை அதிகரிக்கும்.
*இரு அவைகளிலும் விவாதம் நடத்தாமல் மாநிலங்களவையை புறக்கணித்து கல்விக்கொள்கையை நிறைவேற்றியுள்ளனர்.
*மக்களின் கருத்துக்களை கேட்டறிந்ததில் அவைகள் குறித்து தெளிவோ விளக்கங்களோ மாற்றங்களோ இல்லாமல் வெளியாகியுள்ளது.
*கல்வியாளர் நிரஞ்சன் ஆராதயா தயாரித்த வரைவறிக்கை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வரையறுத்த அறிக்கையை பொருத்திப் பார்த்தால் குறைகள் இருப்பது தெரிகிறது.
#எதிர்காலம்
தரம் குறைவாக இருப்பதாக கூறும் வல்லுநர்கள் மாற்றாக தேர்வு ஒன்றே வழி என வரையறுத்திருப்பது மனப்பாடம் செய்யும் முறையையே ஊக்குவிக்கிறது. படிப்படியாக தேர்வு மூலம் வடிகட்டும் போது இறுதியில் வாய்ப்புள்ளவர் மட்டுமே முன்னேற முடியும். எட்டாம் வகுப்புவரை தேர்ச்சி என்பதால் 73% சதவீத மாணாக்கர் படிப்பைத் தொடர்ந்தனர். இனி குறையலாம். அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு. பயமுறுத்தும் சில அம்சங்கள் இருப்பது குறையாக சாமானியர்க்கு தெரிகிறது. குறைகளை களைவதும், அக்குறைகளுக்கு விளக்கமளிப்பதும் அரசின் கடமையும் கூட.
கல்வியாளர் நாயக் குறிப்பிடுவார் Trinity of Indian education அதாவது quantity, quality, equality என இம்மூன்றும் மிக அவசியம் என்று.
சாமானியரின் எதிர்பார்ப்பும் இம்மூன்றும் தான்
-நற்றிணை









