மதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
"ஆசிரியர்களின் சமூகஅக்கறை" என்ற தலைப்பில்
துர்வாசர் என்ற பெயரில் தனியார்பள்ளிக்கு வக்காலத்து வாங்கும்
வண்ணநிலவன் அரசுப்பள்ளி ஆசிரியர்களை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு
வரிந்துகட்டுவது ஏன் ?
துக்ளக் வாரஇதழ் துணிச்சல் மிக்க யாரிடமும் அடகு போகாத அனைவராலும்
ஏற்றுக் கொள்ளப்பட்ட. வாரஇதழ். மரியாதைக்குரிய சோ அவர்களால் திறம்பட
நடத்தப்பட்டு அவருக்குப்பிறகு திரு. ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களால்
தொடர்ந்து நடத்திவருவது பாராட்டுக்குரியது.
ஆனால் பத்திரிகை தர்மம் மீறி செயல்படும் சிலரால் துக்ளக் இதழ் தரம்
குறைவதை துக்ளக் ஆசிரியர் கவனிக்காமல் விட்டால் தடியெடுத்தவரெல்லாம்
தண்டல்காரராக மாறிப்போவார்கள். என்னைப் போன்ற வாசகர்களால் துக்ளக் தரம்
தாழ்ந்துப்போவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
>துர்வாசருக்கு சில கேள்விகள்
தனியார்பள்ளி ஆசிரியர்கள் பதினைந்தாயிரத்திற்கும்
இருபதாயிரத்திற்கும் தாளம் போடுகிறார்கள் என்று எழுதும் துர்வாசர் ஏன்
அவர்களின் உழைப்பைச்சுரண்டி குறைந்தஊதியம் வழங்குகிறார்கள் கேள்வி
எழுப்பமுடியவில்ல ?
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பில்டிங் பண்ட் உள்ளிட்ட
மறைமுகக் கட்டணம் வசூலிப்பதை கண்டுகொள்ளவில்லையே ஏன்?
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எல்லா பேரிடர் காலத்திலும் இரவுபகல் பாராமல்
உழைத்து வருகிறார்கள். கொரோனாவின் அச்சத்தால் ஒரு அமைப்பு உயர்நீதிமன்றத்தை
அணுகியது. அதனைவைத்து ஒட்டு மொத்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்மீது அவதூறு
பரப்புவதா?
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மூன்று சிப்ட் காலை 8 மணி முதல் 2 வரை, 2
மணிமுதல் இரவு 8 வரை, இரவு 8 முதல் காலை வரை அட்டவணைப்போட்டு பணிபுரிந்து
வருவது பத்திரிகையாளருக்கு தெரியாதா?
ஏன் பெண் ஆசிரியர் இரவு நேரத்தில் டோல்கேட்டில் நின்று
வெளிமாவட்டத்திலிருந்துவரும் நபர்களை e - pass உள்ளிட்டவைகளை பரிசோதனை
பணியிலும் ஈடுபட்டு வருவது தெரியாதா?
மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மைபணியாளர்கள்,காவலர்கள் அவரவர்
துறைசார்ந்தப் பணிகளை மிகச்சிறப்பாக செய்துவருவது போற்றுதலுக்குரியது.
ஆனால் ஆசிரியர்கள்
துறை சாராத அனைத்துவகைப் பணிகள் செய்வதோடு பேரிடர் காலத்திலும்
அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிந்துவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை
அசிங்கப்படுத்துவது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இல்லையா ?
கொரோனா காலத்திலும் செய்தியை பரபரப்பாக்கிட அரசுப்பள்ளி
ஆசிரியர்களை பலிகடாக்குவதா?
பாரம்பரியமிக்க துக்ளக் போன்ற வாரஇதழ்களில் இதுபோன்ற செய்திகள்
வருவது துக்ளக் படிக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் மனதைப்
புண்படுத்தியிருக்கிறதை அறிவீரா?
தொடர்புடைய நிருபர் வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட வாசகன் என்ற
முறையிலும் நான் சார்ந்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்.
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716