சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை
பாதுகாக்கும் நோக்கில் ஊராட்சித் தலைவர் ஒருவர் தன் இரு குழந்தைகளையும்
அரசுப் பள்ளியில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை
மாவட்டம் காளையார்கோயில் அருகே மாரந்தை என்ற ஊராட்சியில் உள்ள
தொடக்கப்பள்ளியில் 6 மாணவர்களே படித்துவந்துள்ளனர். 10க்கும் குறைவான
மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளை வேறு பள்ளிகளுடன் இணைத்தும்,
மாணவர்கள் இல்லாத அரசுப் பள்ளிகளையும் சமீபத்தில் அரசு மூடியது.
இந்த
நிலையில், மாரந்தை ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் மிகவும் குறைவான
மாணவர்களே படிப்பதை அறிந்த ஊராட்சித் தலைவர் திருவாசகம், தன் இரு
குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.
அவரது இரு குழந்தைகளும் தனியார் பள்ளியில் படித்துவந்த
நிலையில், தற்போது அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்ட பின்னர், மற்றவர்களும்
தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளி | கோப்புப் படம்
இதுகுறித்து
திருவாசகம் பேசியபோது, "எங்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும்
மாணவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருந்தது. இதனால், பள்ளியை மூடும்
அபாயம் ஏற்பட்டது. அரசுப் பள்ளிகளை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும்.
முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதற்காக முதலில் என் இரு குழந்தைகளையும்
அரசுப் பள்ளியில் சேர்த்தேன். தற்போது பலர் முன்வந்துள்ளனர். 21க்கும்
அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் மாணவர்களின் சேர்க்கையை
அதிகரிக்க தற்போது முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளேன்" என்று
தெரிவித்துள்ளார்.








