அன்பான, அக்கறையான மற்றும் வெற்றிகரமான தாயாக இருப்பதென்பது நீங்கள்
நினைத்துக் கொண்டிருப்பது போல் எளிதானதல்ல. முக்கியமாக, நீங்கள் அண்மையில்
குழந்தை பெற்று புதிதாக தாய்மை பருவத்தை எட்டியிருப்பின் இது மிகவும்
கடினம். தாய்மையைப் பற்றிய அனுபவமோ அல்லது தெளிவோ உங்களுக்கு அவ்வளவாக
இருக்காது. இளம் தாயாக நீங்கள் சந்திக்கக்கூடிய பல பிரச்சனைகளுள் உங்கள்
குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய உணவு வகைகளைப் பற்றிய ஞானமும்
அடங்கும்.
மூச்சடைப்பு ஆபத்து மற்றும்
அரிப்பு ஏற்படுதல் போன்றவை சில உணவு வகைகளால் உண்டாகக்கூடிய மிகப்பெரும்
பாதிப்புகளாகும். குழந்தை பிறந்து 4 முதல் 6 மாதங்கள் ஆகும் வரை திட உணவை
தவிர்க்க வேண்டும் என்றே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஆனால் பல சமயங்களில் பெற்றோர்கள் தாங்கள் உண்ணும் உண்வை
குழந்தைக்கும் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கட்டுப்படுத்த இயலாமல்
சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
எவ்வகை உணவுகள் ஆரோக்கியமானவை
மற்றும் பாதுகாப்பானவை என்று அறிந்து கொள்ளும் வரை நீங்கள் பொறுமை காக்க
வேண்டியது அவசியம். பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ள ஆபத்தான குழந்தை உணவு
வகைகளை தவிர்ப்பது, காரணம் இன்னதென்று அறிய முடியாத நோய்கள் மற்றும்
உடல்நலக் கோளாறுகளிலிருந்து உங்கள் குழந்தையை காத்துக் கொள்ள உங்களுக்கு
உதவும்.
பசும்பால்
ஒரு வருடத்திற்கும் குறைவான வயதுடைய
குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலைப் போன்ற மிகச்சிறந்த சத்தான உணவு
வேறொன்றுமில்லை. உங்கள் குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக்கூடாது என்பதற்கு
உறுதியான சில காரணங்கள் உள்ளன. உதாரணமாக, பாலில் இரும்புச்சத்து மிகவும்
குறைவாக இருப்பதினால், பசும்பால் அருந்தும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து
குறைபாடு வருவதற்கான சாத்தியம் அதிகம். மேலும், பசும்பாலில் வைட்டமின் சி, ஈ
மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்களும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
இச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வது குழந்தைகளின் பிஞ்சு உடலுக்கு மிகக்
கடினமான காரியமே. பசும்பால் அருந்துவது சில வகை ஜீரணக் கோளாறுகளையும்
உண்டாக்கும் என்பதனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது
உசிதமானதல்ல. பெரியவர்களைப் பொறுத்தவரை பசும்பால் சர்வ நிச்சயமாக
ஆரோக்கியமானதாக இருந்தாலும், குழந்தைகளை பொறுத்தவரை அது பாதுகாப்பற்ற
உணவாகும். மேலும், பசும்பால் குழந்தைகளின் சிறுநீரகங்களை மிக மோசமாக
பாதிக்கக்கூடும்.
நட்ஸ்
குழந்தைகளுக்கு 4 வயதாகும் வரை
எவ்வகையான நட்ஸ்களையும் அவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்பது நீங்கள் மிக
முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியதொரு விஷயமாகும். இதற்கு முக்கிய காரணம்
மூச்சடைப்பு ஆபத்து இதில் ஒளிந்திருப்பதே ஆகும். நட்ஸ் வகைகள் மட்டுமே
ஆபத்தானவை அல்ல, அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் மிகவும்
கெட்டியாக இருப்பதனால், அதுவும் ஆபத்தானதே. தற்போது ஏராளமான மக்கள்
பல்வகையான ஒவ்வாமைகளால் அவதிப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு
உங்கள் குழந்தையும் விதிவிலக்கல்ல. நட்ஸ் வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு
கொடுப்பதன் மூலம் அவர்களை நீங்கள் ஒவ்வாமை என்ற ஆபத்துக்கு
உள்ளாக்கிவிடக்கூடும். உங்கள் குழந்தைகளுக்கு நட்ஸ் வகைகளை கொடுப்பதற்கு
முன் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதே எங்களது
அறிவுரை.
மீன் வகைகள்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு
கொடுப்பதற்கு பயப்படும் உணவு ஒன்று உள்ளது. அது மீன் தான். ஏன் இது
குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை? இக்கேள்விக்கு சில விடைகளை அளிக்க
எங்களால் முடியும். உதாரணமாக, மீன்களில் மெர்க்குரி இருப்பதினால், உடல்
வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. கிங் மார்க்கெல் மற்றும்
கொம்பன் சுறா போன்ற மீன் வகைகளில் முக்கியமாக கவனம் தேவை. இவை அதீதமான
மெர்க்குரி அளவுகளைக் கொண்டிருக்கும் மீன் வகைகள். வெவ்வேறு வகை மீன்களால்
ஒருவித ஒவ்வாமை ஏற்படும் என்பதும் யார்க்கும் தெரியாத பரம ரகசியம் அல்ல.
அதனால் உங்கள் குழந்தைகளுக்கு 2 முதல் 3 வயதாகும் வரை நீங்கள்
காத்திருக்கத் தான் வேண்டும். அதற்குப் பின் நீங்கள் விரும்பும் மீன்
வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு ஆசை தீர சமைத்துக் கொடுங்கள். இவ்வாறு
செய்வதனால், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளிலிருந்து உங்கள் குழந்தைகளை நீங்கள்
பாதுகாக்க முடியும். மீன் வகைகள் உங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு
மிகுந்த ஆபத்து விளைவிக்கக்கூடிய உணவுகளுள் ஒன்று என்பதை நீங்கள்
மறுக்கமாட்டீர்கள் என்றே நாங்கள் நினைக்கிறோம்.
முட்டைகள்
குழந்தைகளின்
ஆரோக்கியத்திற்கு முட்டைகள் பாதுகாப்பற்றவை என்ற செய்தி உங்களுக்கு
ஆச்சரியமளித்தாலும், அது தான் உண்மை. குழந்தைகளுக்கு பெரும்பாலும்
முட்டைகள் ஒத்துக்கொள்ளாது என்பதை இளம் தாய்மார்கள் நினைவில் கொள்ள
வேண்டும். ஆனால் கவலையை விடுங்கள். குழந்தைகள் வளர வளர இது போன்ற
ஒவ்வாமைகள் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். ஐந்து வயதில்
உங்கள் குழந்தைகள் எவ்வித பயமுமின்றி தாராளமாக முட்டைகளை உண்ணலாம்.
முட்டைகளினால் ஏற்படக்கூடிய ஒவ்வாமைக்கென சில பிரத்யேக அறிகுறிகள் உள்ளன
என்பதை பொறுப்பான தாய்மார்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். வேகமான
இதயத்துடிப்பு, முகம் சிவத்தல், மூச்சுத்திணறல் போன்றவையே
அவ்வறிகுறிகளாகும். எதுவாயினும், உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றும்
உங்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பிக் கொண்டிராமல், உடனே மருத்துவரைச் சென்று
பார்ப்பதே நல்லது.
பச்சையான உணவுகள்
பச்சைக் காய்கறிகள்
மற்றும் பழங்களில், நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கக்கூடிய ஏராளமான
வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது நம்
அனைவருக்கும் தெரியும். ஆனால் இது பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பச்சைக் காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுப்பது ஆபத்தை உண்டாக்கும்.
முதலாவதாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை மென்று தின்பதென்பது குழந்தைகளுக்கு
மிகவும் கடினம். இரண்டாவதாக, குழந்தைகளின் தொண்டையில் சிக்கிக்கொள்ளும்
அபாயமும் இதில் உள்ளது. பெரிய அளவுடைய எவ்வகை உணவையும், முக்கியமாக வட்ட
வடிவிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை, சிறு துண்டுகளாக்கி குழந்தைகளுக்கு
கொடுப்பதே புத்திசாலித்தனம்.
தேன்
தேனில் ஏராளமான நற்பயன்கள்
உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தேனை உட்கொண்டால் அபரிமிதமான வைட்டமின்கள்
மற்றும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும். தொண்டை புண்ணுக்கு தேன்
போன்ற அருமருந்து வேறில்லை என்பதை சிறு குழந்தை கூட அறியும். தேன் போன்ற
உணவு வகைகளை உங்கள் குழந்தைக்கான உணவு அட்டவணையிலிருந்து நீக்கி விடுவதே
நல்லது என்ற அறிவுரை உங்களுக்கு அதிர்ச்சியளித்தாலும், அதற்கு நீங்கள் செவி
மடுப்பதே நல்லது. உங்கள் குழந்தைக்கு ஒரு வயதேனும் நிறைவடைந்திருந்தால்
மட்டுமே தேனை, அதுவும் மிகச்சிறிய அளவே கொடுக்கலாம். ஏன் குழந்தைகளுக்கு
தேன் மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது? இதனை உட்கொள்வதினால்
பொட்டுலிஸம் என்ற நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதே இதனைப் பற்றிய
மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாகும். தேனில் மட்டுமே இருக்கக்கூடிய
பிரத்யேகமான பாக்டீரியாவே இதற்கு காரணம். தேனை உட்கொள்ளும் அனைத்து
குழந்தைகளுக்கும் இந்நோய் வரும் என்று அர்த்தமில்லை என்றாலும், வரக்கூடிய
சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால்
நீங்கள் உங்கள் குழந்தைக்கு தேனை கொடுத்தேயாக வேண்டும் என்று விரும்பினால்,
தேன் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை தரலாம். அவ்வகை உணவுகளில் தேன் அதிக
வெப்பநிலையில் சூடுபடுத்தப்படுவதினால், அது ஆபத்து ஏதும் விளைவிக்காது.
எனவே கேடு விளைவிக்க்க்கூடிய பாக்டீரியாக்கள் உங்கள் குழந்தையின்
ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
காப்ஃபைன் கலந்திருக்கும் பானங்கள்
சில
பேர் இவ்வாறு கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, காப்ஃபைன் நம்
உடலுக்கு தேவையில்லாத வஸ்து என்பதே எங்கள் தாழ்மையான கருத்து. உண்மையில்,
இந்த வஸ்து இல்லாவிடிலும் கூட நம் உடல் நன்றாகவே செயல்படும். காப்ஃபைனை
உட்கொள்வதன் மூலம் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவற்றை நம்
உடலுக்கு நாம் அளிக்கப்போவதில்லை. இது ஆரோக்கியமான நம் வாழ்க்கை
முறைக்கும், முக்கியமாக நம் ஆரோக்கியத்துக்கும் எவ்விதத்திலும் உதவப்
போவதுமில்லை. காப்ஃபைன் கலந்திருக்கும் பானங்களை குழந்தைகள் அருந்தினால்
பக்கவிளைவுகள் கட்டாயம் உண்டாகும் என்பது உறுதி. இதன் விளைவாக உங்கள்
குழந்தைகள் வாந்தி, வீண் ஆர்ப்பாட்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவர்.
ஏன் உறக்கமின்மை நோயும் கூட ஏற்படலாம்.
இறுதியாக, எவ்விதமான திட
உணவையும் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் முன் குழந்தை நல மருத்துவர் ஒருவரை
அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம் என்பதை நான் சொல்லியாக வேண்டும்.
இதன் மூலம் உங்களுக்கு முன்னரே தெரிந்திடாத தகவல்களையும் நீங்கள் அறிந்து
கொள்ளலாம். எவ்வகை உணவுகள் பயனளிப்பவை, எவ்வகை உணவுகள் தவிர்க்கப்பட
வேண்டியவை என்பதைப் பற்றி உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத உணவு வகைகளைப் பற்றி உங்களுக்கு வேறு
ஏதேனும் தெரிந்திருந்தால் தாராளமாக எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.