தினம் ஒரு புத்தகம்
அ' னா ஆவன்னா
நா. முத்துக்குமார்
ஆசிரியத் தோழமையால் அனுப்பப்பட்ட புத்தகங்களில் ஒன்று.
எளிய இனிய சொற்களாலான புதுக்கவிதை தொகுப்பு இந்நூல்.
நூலிலிருந்து
நானறிந்த எம்ஜிஆர்கள்
சீக்கிரம்
செல்வந்தர்களாகிவிடும்
சினிமா கதைகள்
போலல்லாமல்
சென்ற முறை பார்த்த போதும்
அவர் ரிக்சாதான்
ஓட்டிக் கொண்டிருந்தார்
மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ்
எட்டாம் வகுப்பில்
அறிவியல் எடுத்த
வாத்தியார்
எங்களை முன்வைத்து
தமிழ் பேரகராதிக்கு
இரண்டு பெயர் சொற்களை
தானமாக கொடுத்து
இருந்தார்
சாதுவான பையன்
என்றால்
ஆரியபவன்
சட்டாம்பிள்ளைகளுக்கு
முனியாண்டி விலாஸ்
உணவின் ருசி
உணவில் இல்லை
புறக்கணிப்பின் கசப்பிலும்
குற்ற உணர்ச்சியின் காரத்திலும்
அது ஒளிந்திருக்கிறது
ஐந்தாம் வகுப்பு அ பிரிவு
வாத்தியார் ஆவேன்
என்று சொன்ன
சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த
பள்ளியில் ஆசிரியராக
பணியாற்றுகிறார்
நினைச்ச வேலை
செய்யற
எப்படி இருக்கு மாப்பிள்ளை என்றேன்
சாக்பீஸ் விரல்களால்
என் கைகளைப் பிடித்துக்கொண்டு
படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க ன்னு
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே
இல்லை என்றான்
நெடுநாள் கழித்து சொந்த ஊருக்கு செல்பவர்கள்
சின்னதாகி போன
பால்ய வயதின் சட்டைக்குள்
வளர்ந்த உடலுடன்
நுழைகிறார்கள்
சிற்றில் ஆடிய
வயல்வெளிகள்
பன்னாட்டு தொழிற்சாலைகளின்
புகை போக்கிகள் கீழே
புதைந்து கிடக்கின்றன
ஒவ்வொரு முறை
வந்து போகும் போதும்
நெருங்கிய ஒருவரின்
மரணம் பற்றிய
செய்தியும்
தொடர்புகொண்டு
தெரிவிக்க முடியாமைக்கான
வருத்தமும்
யார் வீட்டு திண்ணையிலோ
ஒரு கண்ணீர் துளியை
போல்
காத்திருக்கிறது
எப்எம் தொகுப்பாளினி
பின் மதிய வெயிலில்
பள்ளி விட்டு வீடு வரும்
குழந்தைகள்
அம்மாக்கள்
பின்னிருந்து கிள்ளக் கிள்ள
மெட்ரிகுலேஷன்
பள்ளியில்
தாங்கள் கற்ற
ரைம்ஸ்களை
மழலையுடன் பாடிக்
காட்டுகிறார்கள்
கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய்
அந்த விவசாயி
மதிய வெயிலில்
மிதந்து செல்லும்
மேகங்களை நோக்கி
கையை நீட்டி நீட்டி
தண்ணீர் வருமா என்று
சோதித்துப் பார்க்கிறார்
அடர்ந்த புகையை போல்
அந்த மேகங்கள்
கலைந்து
காணாமல் போகின்றன
தலையணை வாத்துக்கள்
ஏன் எல்லா பெண்களும்
தலையணை உறைகளில்
வாத்துகளையே
வரைகிறார்கள்
வாத்துகள் இறக்கை
இருந்தும்
அதிக உயரம் பறப்பதில்லை
பிறந்த வீடு, புகுந்த வீடு
எனப் பெண்களை
போலவே
தண்ணீருக்கும்,தரைக்கும் அலைபாய்வதே
வவாத்துகளின் வாழ்க்கை
பாலகாண்டம்
குழந்தைப் பருவம்
உன்னதமானது
கடவுளும் குழந்தையும்
ஒன்று என்கிறார்கள்
கடவுளின் குழந்தை
பருவ
உலகத்தின் சாவியும்
அவர்கள்
பெற்றோரிடமே இருக்கிறது
என்பதை யாரும்
சொல்வதில்லை
ஏடிஎம் வாசலில் காத்திருக்கும் கடவுள்
கடைசியாய் கடவுளின் முறை
அட்டையை
மாற்றி மாற்றி போட்டும்
நம்ப மறுக்கிறது க
ணிப்பொறி
சூனியம் என்பதை
சங்கேத எண்ணாக
ஏற்றுக்கொள்ள
அதற்குப்
பயிற்சி அளிக்கப்படவில்லை
பசி கலந்த கோபத்துடன் வெளியேறுகிறார் கடவுள்
நாளை காலை
செய்தித்தாளில்
நகரத்தில்
துணிகர கொள்ளை
என்று படித்தால்
கடவுளை யாரும்
சந்தேகப்படாதீர்கள்
குறுந்தொகை
விடிகாலை நீ தூங்க
விண்மீனில்
விளக்கு வைப்பேன்
வெந்நீரில் நீ குளிக்க
விறகாகி தீக்குளிப்பேன்
சாதா டிவி போர் அடிச்சா
சன் டிவி கனெக்ஷன்
வைப்பேன்
டவுன் பஸ்ஸில்
கூட்டம் அதிகம்
டாடா சுமோ
அனுப்பிவைப்பேன்
நாய்க்குட்டி அது எதுக்கு?
மான்குட்டி வளர்க்க செல்வேன்.
என்றெல்லாம்
வாக்கு தந்து
ஏமாற்ற மாட்டேன்
என் சம்பளம் ஆயிரம்தான்
அதுக்குள்ள வாழலாம் வா
பிரபஞ்ச ரகசியம்
கவனம்
கண்ணாடி பார்க்கும்
போதெல்லாம்
நாம்
கடவுளை பார்க்கிறோம்
வயலும் வாழ்வும்
தங்களையும்
எஞ்சியிருக்கும் நிலங்களையும்
காங்கீரீட்களாக
மாற்றிக் கொண்டிருக்கும்
மாநகரத்திற்கு
நெல் மூட்டைகளை
அனுப்பி வைக்கிறார்கள்
விவசாயிகள்
வாழ்ந்து கெட்ட வீடு
பக்கத்து ஊர்
தொழிற்சாலைக்கு
புதிதாக வேலைக்குப்
போக துவங்கியிருக்கும் வீட்டின் பெண்கள்
காய்ப்பேறிய தங்கள்
கைகளை யாருமற்ற
தனிமையில் தடவி பார்க்கிறார்கள்
அதில் இன்னமும்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
கொஞ்சமே கொஞ்சூண்டு
மருதாணியும்
வைராக்கியமும்
குழந்தைகளுடன் பேசும் கலை
கடவுளிடம் பேசுகிறோம்
என்கின்ற பயமே
இல்லாமல்
குழந்தைகளுடன் பேசுகிறார்கள்
வளர்ந்த மனிதர்கள்
எல்லோரும் ஒரு காலத்தில்
குழந்தையாக இருந்தாலும்
வளர்ந்தபின்
தொலைந்து விடுகிறது
குழந்தைகளின் உலகத்தை
திறக்கும் சாவி
சபை அறிதல்
இங்கு
பெரும்பாலும் கல்யாணத்தை
மட்டுமல்ல
கல்யாணத்தில்
கலந்து கொள்வதைக் கூட
நகைகள்தான் தீர்மானிக்கின்றன
பரவசங்கள் அடங்கி
லௌவ்கிக பள்ளத்தில்
நீயும் விழும் ஒரு நாளில்
நான் வந்து வாழ்த்துகிறேன்
பரிசளிக்க தெம்பிருந்தால்
பால் குக்கருடனோ
அல்லது
சுவர் கடிகாரத்துடனோ
இடம் சுட்டி பொருள் விளக்கம்
எல்லா
பள்ளிக்கூட வாசல்களிலும்
கைகள் நடுங்கும்
ஒரு பாட்டி
வேர்க்கடலை விற்கிறாள்
எல்லா
அடகு கடைகளிலும்
கம்மல்களிலும்
இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது
பிரிய மனமில்லாமல்
கழட்டி கொடுத்த
ஒரு பெண்ணின்
கண்ணீர் துளி
எல்லா மருத்துவர்களுக்கும்
வாய்த்துவிடுகிறது
புரியாத கையெழுத்து
ஆறு வித்தியாசங்கள்
ஒன்று
ஜோதிட குறிப்புகளில் தண்ணீரில் கண்டம்
என்பது
தண்ணீர் லாரியில் கண்டம்
என்று இருக்க வேண்டும்
2
இடது புறம் இருக்கும்
சேட்டு கடையில்
தமிழ் நகைகள்
இந்தி பேசுகின்றன
3 முதல்முறையாக செல்போனில்
பேசும் கிராமத்து ஆசாமி
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கிறார்
என ஆங்கிலத்தில் அறிவிக்கும்
கணிப்பொறி பதிவுகளிடம்
ஒன்னும் புரியல
தமிழ்ல பேசுமா என்று
கெஞ்சிக் கொண்டிருக்கிறார்
அவர் காதுகளில் தொழில்நுட்பம்
கம்மல் மாட்டி இருக்கிறது
4
காவிரி ஆறு
நதிக்கரை நாகரிகம்
அல்ல
நதிக்கரை அநாகரிகம்
5
டைகர் இங்கே வா
என்றதும்
வீட்டில் இருந்து
வெளிவருகிறது
நாய்க்குட்டி
ஆறு
அடுக்குமாடி குடியிருப்பின்
மொட்டை மாடியில்
நிலா இருக்கிறது
சோறும் இருக்கிறது
ஊட்டுவதற்கு தான்
தாயில்லை
ஓடி விளையாடாதே பாப்பா
கள்ளன் போலீஸ்
ஆட்டத்தில்
கள்ளன் ஆக ஒளியவன்
கடைசிவரை
அப்படியே தொடரலாம்.
கபடி கபடியில்
காலை வாருகையில்
கண்ணியம் தவறலாம்
கேரம் போர்டில்
கருப்பைவிட
வெள்ளைக்கு
மதிப்பு அதிகம் என்பது
நிறவேற்றுமையை
நெஞ்சுக்குள் விதைக்கலாம்
காய்ந்து வெடித்த
குளம் பார்க்கும்பொழுது
கட்டை வண்டி ஓடுகிற
ஆறுகளை பார்க்கும்போது
கோபம் வராமல்
குச்சி நட்டு
கிரிக்கெட் ஆட
தோன்றலாம்
எனவே
ஓடி விளையாடாதே பாப்பா
ஒப்புதல் வாக்குமூலம் பூங்காவும் மேகங்களும் ஊட்டி மலை பங்களாவும்
தென்றல் வரும் ஏசி ரூம் ஏங்காணும்
யாருக்கு வேணும் எனக்கென்றும் பாட்டு எழுத
தேர்வேணாம் போதும் தரை
நாட்டின் நடப்புகளை இயல்பான சொற்களில் புதுக்கவிதை ஆக்கி நெஞ்சைத் தைத்திருக்கிறார்
நா முத்துக்குமார்.
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்