புதுச்சேரி: நீட் தேர்வினால் தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட
குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வால் மாணவர்கள் மனதளவில்
பாதிக்கப்படுவதால் 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முன்பு
இருந்ததை போல் தொடர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்
எழுதியுள்ளார். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கடினம்
என்பதால் ஜே.இ.இ தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனவும் மோடிக்கு எழுதியுள்ள
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் நாராயணசாமி.
ஒரு
பக்கம் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மறுபக்கம் பல மாநிலங்களில்
வெள்ளம் பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் நீட் தேர்வினையும், ஜேஇஇ
எனப்படும் பொது நுழைவுத்தேர்வுகளை நடத்தியே தீருவது என மத்திய அரசும் தேசிய
தகுதித்தேர்வு முகமையும் உறுதியாக உள்ளன.
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்
ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்
இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலம் புதன்கிழமை மாலை
ஆலோசனை நடத்தினார்.
நீட் தேர்வை ரத்து செய்யவும் ஜேஇஇ தேர்வை ஒத்தி
வைக்கவும் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் சார்பில்
வழக்குத் தொடர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
வலியுறுத்தினார். எதிர்கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தினால் மத்திய அரசு
நிச்சயம் இறங்கி வரும் எனவும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இந்த
நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் நாராயணசாமி எழுதியுள்ள கடிதத்தில் நீட்
தேர்வை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை
கடைபிடிப்பது கடினம் என்பதால் ஜேஇஇ தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று
வலியுறுத்தியுள்ளார்.
நீட்
தேர்வு சிபிஎஸ்இ கல்வி முறையின் அடிப்படையில் நடக்கிறது. பல மாநிலங்களில்
மாநில அரசு கல்விமுறை உள்ளது. நீட் தேர்வினால் தமிழகத்தில் 7க்கும்
மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். மாணவர்கள் மனதளவில் நீட்
தேர்வால் பாதிக்கப்படுகின்றனர். 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்
அடிப்படையில் முன்பு இருந்ததை போல் தொடர வேண்டும் என்றும் நாராயணசாமி
எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.







