ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பொதுவாக
ஆடி மாதத்தையும், மார்கழி மாதத்தையும் பீடை மாதம் என்று சொல்வார்கள்.
ஆனால், 18ஆம் பெருக்கு என்பது அந்த மாதிரி கிடையாது. ஆறு என்றால் நீர்
பெருக்கெடுத்து ஓடும். அப்பொழுதெல்லாம் பருவ மழை மிகச் சரியாகப் பொழிந்தது.
ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப அந்த நேரத்தில் மழை இருந்தது.
சித்திரை, வைகாசி, ஆணி இந்த மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய காய்ச்சல்
முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து எல்லா விளை நிலங்களும்
விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் - ஆடியில் வருவது புதுவெள்ளம்,
ஐப்பசியில் வருது வேறு வெள்ளம் - இந்த புதுவெள்ளத்துடன் வரக்கூடியதுதான்
ஆடிப் பெருக்கு.
இதுமட்டுமல்லாமல்,
ஆடி பதினெட்டாம் பெருக்கைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. சங்க
நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக
நினைத்து வணங்கினார்கள். இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது
அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடிவரும் அந்த புதுவெள்ளம், புது
நீர் வரும்போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள்
கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வது.
சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்
கொள்வார்கள்.
இந்த
மாதிரி 18ஆம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. அதனால் ஆடி 18ஆம் தேதி
மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில்
புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி
18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு
சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன்
நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.
ஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் பூசம்
நட்சத்திரத்தினுடைய டிகிரியில் இருந்து மாறி புதன் ஆயில்ய பாதத்தில்
வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடிகளில் பச்சையத் தன்மை
சதவிகிதம் அதிகரிக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இதுபோன்றெல்லாம்
செய்வது.
மேலும்,
இயற்கை உணவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல், காப்பி அரிசி வெல்லமிட்ட காப்பி
அரிசி - கைக்குத்தல் அரிசி என்று சொல்வார்களே - பொங்கல் வைத்து அம்மனுக்கு
விசேஷப் பூஜைகள் செய்வது, புத்தாடை அணிதல், எல்லைத் தெய்வங்களுக்கு விசேஷ
பூஜைகள் நடத்துதல் இதெல்லாம் பலன் தரும்.