
நமது உடலில் புழுக்கள், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் ஏராளமாக இருக்கின்றன. நாம் எதைச் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து உடலுக்கு நன்மை அளிக்கும் அல்லது தீமை தரும் உயிரிகள் வளர்ந்து பெருகுகின்றன. அந்த வகையில், வயிற்றில் ஏற்படும் பல வகைக் கோளாறுகளுக்குக் காரணமாக இருப்பது குடல் புழுக்கள் பெருக்கம்.
சுத்தமற்ற குடிநீர், அளவுக்கு மிஞ்சிய இனிப்புகள், அதீதமாக அசைவ உணவு உண்ணுதல் போன்றவை குடல் புழுக்கள் அதிகரிக்க முக்கியக் காரணங்கள் ஆகும். இதனை அழிக்க, மருந்தகங்களில் மருந்துகள் விற்கப்படுகின்றன. இவற்றைச் சாப்பிடுவதால் தற்காலிகத் தீர்வுகள் கிடைக்குமே அன்றி பிரச்சனை முழுதாகத் தீராது. இவ்வாறு நாம் உண்ணும் மருந்துகளால் வயிற்றுக்கு நன்மை அளிக்கும் நுண்ணுயிரிகளும் கூட அழியும் வாய்ப்புகள் அதிகம்.
இதனைத் தவிர்க்க, ஆயுர்வேத மருத்துவம் ‘உணவே மருந்து’ எனும் நுட்பத்தை நமக்குத் தந்திருக்கிறது. இதன்படி, நமது தினசரிச் சமையலில் சில உணவுப் பொருட்களைச் சேர்த்தாலே போதும். குடல் புழுக்கள் தொந்தரவை எளிதாகக் கடந்துவிடலாம். அப்படியொன்று தான் கோவைக்காய்.
இதனைத் துவையலாக அரைத்துக் கொடுக்கலாம். ஆவியில் வேக வைக்கப்பட்ட கோவைக்காய், உளுந்தம் பருப்பு, வர மிளகாய், தேங்காய், புளி, கடுகு, சீரகம், பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு, எண்ணெய் இருந்தால் போதும். உடனடியாக இதனைத் தயார் செய்யலாம்.
கோவைக்காயை ஆவியில் வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, அதனுடன் உளுந்தம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் தனியாக கோவைக்காயை வதக்க வேண்டும். நன்றாக வெந்தபின்னர், மிகச் சிறிய அளவில் புளியை எடுத்து அதனுடன் சேர்த்து, வறுத்த உளுந்து, வர மிளகாய் கலவையுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். கடுகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து இதனுடன் சேர்த்தால் போதும். குடல் புழுக்களை நீக்கும் கோவைக்காய் துவையல் தயார் ஆகிவிடும்.
இதனை மதிய உணவாக சோற்றுடன் கலந்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை இதனைச் செய்து வரலாம். அவ்வாறு செய்தால், குழந்தைகள் மலம் கழிக்கும்போது புழுக்கள், நாக்கு பூச்சிகள் போன்றவை தானாக வெளியேறும். அதிக அமிலத்தன்மையை உண்டுபண்ணும் பாக்டீரியாக்களும் கூட இதனால் மறைந்து போகும்.
இதனை உண்பதால் உடலில் காரத்தன்மை சீராக இருக்கும். அதேபோல பித்தப்பையில் கற்கள் இருந்தாலும், அதனைப் போக்கும் வல்லமை இந்த கோவைக்காய்க்கு உண்டு. இதனை எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம். ஆனால், இதனைப் பொறியல் செய்தோ, குழம்பில் சேர்த்தோ சாப்பிடத் தயக்கம் கொள்பவர்கள் துவையல் செய்து சாப்பிடலாம்!








