பாடல்கள் கேட்பதோ அதிலும் தூங்குவதற்கு முன் பாடல்கள் கேட்பதோ தவறான பழக்கம் அல்ல. ஆனால், இயர்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவதுதான் சரியானது அல்ல.அதனால் என்ன பிரச்சினை எனக் கேட்கிறீர்களா? நிச்சயம் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் ஐந்து விஷயங்களை மட்டும் தற்போது பார்ப்போம்.
* தூக்கம் வராமல் இருக்க பாடல்கள் கேட்பது என்பது மாறி, நல்ல பாடல்களைக் கேட்டுக்கொண்டே நீண்ட நேரம் விழித்துக்கொண்டே இருக்கக்கூடும். அதனால், காலையில் நீங்கள் நினைத்த நேரத்தில் விழித்து எழ முடியாமல் லேட்டாகலாம்.
* சில இயர்போன்களில் காதில் செருகும் இயர்பட்ஸ் ரொம்பச் சின்னதாக இருக்கும். அதனால், தூங்கும்போது காதில் இருந்தால், கைப்பட்டு அல்லது தலையை சாய்த்து தூங்குகையில் அது உள்ளே போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ரொம்ப ஆழத்துக்குள் பட்ஸ் போய்விட்டால் மருத்துவரை அணுகுமளவுக்கு பிரச்னைகள் வரக்கூடும். உடனே, பெரிய பட்ஸ் உள்ள இயர்போனை வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லாதீர்கள். அதை மாட்டிக்கொண்டு புறண்டு படுக்கையில் காதில் அழுத்தி வலி போன்ற சில சிக்கல்கள் வரலாம்.
* காதில் தண்ணீர் புகுந்து சாதரண வலியாக இருக்கலாம். அதோடு நீங்கள் இயர்போனில் பாட்டுக்கொண்டே தூங்கும்போது, வலி அதிகரிக்கலாம் அல்லது தலைவலியும் வரலாம்.
* ஓர் அறையில் இயர்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே தூங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். கதவைச் சாத்திவிட்டீர்கள். வெளியில் இருப்பவர்கள் ஏதேனும் அவசரம் என்று கதவைத் தட்டினாலோ, கத்தி அழைத்தாலோ உங்கள் காதுகளில் அந்தச் சத்தம் கேட்காது. அதனால், அவசரமான உதவி உங்களால் செய்ய முடியாமல் போகலாம் அல்லது உங்கள் அறைக்குள் தீப்பிடித்தல் போன்ற விஷயங்கள் நடந்தால்கூட மற்றவர்களால் தெரிவிக்க முடியாமல் போய்விடும்.
* இயர்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே நன்கு தூங்கிவிடுகிறீர்கள். காலில் அல்லது கையில் ஏதோ தட்டுப்பட சட்டென்று பதற்றத்துடன் விழித்துக்கொள்கிறீர்கள். அந்த நேரத்தில் காதில் சத்தமாக பாட்டுக் கேட்டால் இன்னும் பதற்றம் அதிகமாகி விடும். என்னவோ ஏதோ என்று குழம்பி விடுவீர்கள். அதற்குப் பிறகு எப்படித் தூங்குவது?
இன்னும் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனால், நாம் குறிப்பிட்ட நேரம் மட்டும் பாடல்களைக் கேட்டுவிட்டு, பிறகு நிறுத்திவிட்டு உறங்குவதே சரியானது. அதுவே, நிம்மதியான உறக்கத்திற்கு நல்லது.








