மதுரை; மதுரையில் சத்துணவு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் போது வருவாய், இருப்பிடச் சான்றுகளை இணைக்க கட்டாயப்படுத்த கூடாது என தினமலர் செய்தி எதிரொலியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 358 சத்துணவு அமைப்பாளர், 559 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனத்திற்கு செப்.,27 ல் அறிவிக்கப்பட்டது.அக்.,5 விண்ணப்பிக்க கடைசி நாள். மொத்தமுள்ள ஒன்பது நாட்களில் ஆறு நாட்கள் மட்டுமே விண்ணப்பிக்கும்வாய்ப்பு உள்ளது. இதில் வருவாய், இருப்பிடச் சான்றுகள், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான சான்று இணைக்க வேண்டும் என்பதால் அச்சான்றுகள் விண்ணப்பித்து பெற குறைந்தது மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என்பதால் பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக விண்ணப்பத்துடன் வருவாய், இருப்பிடம், விதவை சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வற்புறுத்தக்கூடாது. அச்சான்றுகள் இல்லையென்றாலும் அதை ஏற்க வேண்டும். மேலும் நேர்காணலுக்கு வரும்போது குறிப்பிட்ட அச்சான்றுகளுடன் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.