வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள்
காலம் மாற மாற, புதிய புதிய
தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித
விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நல
கோளாறுகள் ஏற்கனவே உண்டு.
அது தற்சமயம்
வாட்ஸ்-அப் பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது.
இது வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை
என்பதால் அதையே பெயரிலும் வைத்துவிட்டார்கள். எனவே இது வாட்ஸ்-அப்
பயன்படுத்துகிற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது.
செல்போன்
வருவதற்கு முன்பு தட்டச்சு எந்திரத்தில் அதிக நேரம் தட்டச்சு
செய்பவர்களுக்கு அனைத்து விரல்களிலும் தேய்மானம் ஏற்பட்டு தசை மற்றும்
எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதை ‘ஸ்டெனோகிராபர் தம்ப் டிசார்டர்’
என்று சொல்வது உண்டு. இப்போது செல்போன் மற்றும் கணினியில் அதிக நேரம் டைப்
செய்கிற போது, இதே போன்ற தேய்மான பிரச்சினைகளை அதன் தன்மையைப் பொறுத்து,
‘டெக்ஸ்ட் தம்ப்’, ‘வாட்ஸ்-அப் பைட்டிஸ்’, ‘பிளாக்பெரி தம்ப்’, ‘டெக்
நெக்’, ‘செல்போன் எல்போ சின்டோராம்’ போன்ற பல்வேறு பெயர்களில்
அழைக்கப்படுகிறது. செல்போனில் வாட்ஸ்-அப் போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம்
தொடர்ந்து டைப் செய்து சாட்டிங் செய்கிற போது, நமது கையில் உள்ள விரல்களை
அதிக அளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையை குனிந்த நிலையில்
இருக்கிறோம்.
இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும். சிலர் செல்போனில்
டைப் செய்வதற்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவது உண்டு. இதனால் ஒரு
கையில் மட்டும் அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக இரண்டு கைகளாலும்
டைப் செய்கிற போது கைகளில் ஏற்படுகிற பாதிப்புகள் சற்று குறைய
வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனின் அளவு பெரிதாக பெரிதாக டைப் செய்கிற பகுதி
பெரிதாவதால் சற்று சுலபமாக டைப் செய்யலாம். டேப்லெட், லேப்டாப் போன்ற
சற்று பெரிய திரையை உடைய கருவிகளை கீழே வைத்து பயன்படுத்தும் போது அதிக
அளவு தலையை குனிந்து இருப்பதால் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் அதிக வலி
ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தசைகள், எலும்புகள்
சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி
திரைகளை பார்த்து கொண்டிருப்பதால் கண்கள் உலர்ந்து விடுகின்றன. இதுபோன்ற
டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களால் தற்காலிக
கண்பார்வை குறைபாடு ஏற்படுவதோடு கண் விழித்திரை குறைபாடும் உண்டாகிறது.
இரவு நேரங்களில் தூக்கத்தை தவிர்த்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால்
தூக்கக் குறைபாடுகள் மற்றும் நினைவுத்திறன் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
செல்போன்,
கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு
முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த
திறன்களும் குறைகின்றன. மேலும் இதனால் அதிக கோபமும், அதிக மன அழுத்தமும்
உண்டாகிறது.
குழந்தை பருவத்தில் இதுபோன்ற
டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கவனக்குறைவு,
மொழியை கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்சினை ஏற்படுவதோடு கண்ணில்
கிட்டப்பார்வை கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தைகளின்
மூளை வளர்ச்சியில் பிரச்சினை ஏற்படவும் காரணமாகிறது. பெற்றோர்
குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து வருவதோடு, அவர்களை
அமைதிப்படுத்துவதற்காக செல்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதால், நாளடைவில்
அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் நிலை உண்டாகிறது.







