ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான்.
கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை.
மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான்.
கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான்.
நீ என்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு காசு கூலி, என்றான் செல்வன்.
வேலைக்காரனுக்குப் பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா! என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.
காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் எதிரில் ஒரு குள்ளன் வந்தான்.
அந்தக் குள்ளன் இரண்டடி உயரமே இருந்தான். அவனின் நீண்ட வெள்ளைத் தாடி தரையில் புரண்டது தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான். வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன்.
எதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன், ஐயா! நான் ஏழை, குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வேலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். என் மீது இரக்கப்பட்டு ஏதேனும் உதவி செய்யுங்கள், என்று கெஞ்சினான்.
உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது. இதை நீ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கிறது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்ட முடியும், என்று சொல்லி விட்டுத் தன் பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான்.
அதை பெற்றுக் கொண்ட குள்ளன், நீ நல்லவன் உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுகளை என்னிடம் தந்து உள்ளாய். என்னால் எதுவும் செய்ய முடியும். உன் மூன்று விருப்பங்களைச் சொல். எப்படிப் பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன், என்றான்.
சிந்தனையில் ஆழ்ந்த அவன், குறி வைத்தால் குறி தப்பவே கூடாது. அப்படிப்பட்ட வில்லும் அம்புகளும் தேவை. நான் புல்லாங்குழலை இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் அத்தகைய புல்லாங்குழல் தேவை. நான் எதைக் கேட்டாலும் மற்றவர்கள் அதை மறுக்கக் கூடாது. இதுவே என் மூன்று விருப்பங்கள், என்றான்.
அடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும் புல்லாங்குழலும் இருந்தன. அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன். உன் விருப்பங்கள் நிறைவேறும், போய் வா, என்றான்.
குள்ளனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். சிறிது தூரம் சென்றிருப்பான்.
அங்கே ஒரு திருடன் கையில் பொற்காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் ஒரு பறவை கத்திக் கொண்டிருந்தது.
இந்தப் பறவை மட்டும் என் கையில் கிடைத்தால் போதும். என் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன்? அதை அடித்து வீழ்த்த வில்லோ அம்புகளோ என்னிடம் இல்லையே, என்று சொல்லிக் கொண்டு இருந்தான் திருடன்.
இதைக் கேட்டான் அவன் தன் வில்லில் அம்பு பூட்டிப் பறவைக்குக் குறி வைத்தான். குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது.
திருடனே! அந்தப் பறவையை எடுத்துக் கொள், என்று கத்தினான் அவன்.
முள் நிறைந்த புதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காகக் குனிந்தான்.
உடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான்.
தன்னை அறியாமல் பாட்டிற்கு ஏற்ப ஆடத் தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன்.
இசைக்கு ஏற்ப திருடன் இங்கும் அங்கும் வேகமாக ஆடத் தொடங்கினான். சுற்றி இருந்த முட்கள் அவன் உடைகளைக் கிழித்தன. உடலுக்குள் தைத்து வேதனையை ஏற்படுத்தின.
திருடன் வலியைத் தாங்க முடியவில்லை. ஐயா! பாடுவதை நிறுத்துங்கள் என்று கெஞ்சினான்.
எத்தனை பேருக்கு நீ எவ்வளவு துன்பம் தந்து இருப்பாய்? யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா? கொடியவனான உனக்குத் தக்க தண்டனை இதுதான், என்ற அவன் மேலும் வேகமாக இசைக்கத் தொடங்கினான்.
முட்கள் மேலும் மேலும் திருடனின் உடலைக் கிழித்தன.
ஐயா! இனிமேல் என்னால் தாங்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். நல்லவனாகி விட்டேன். நான் திருடிச் சேர்த்த இந்த பொற்காசுகளை உங்களுக்குத் தந்து விடுகிறேன். பாடுவதை நிறுத்துங்கள், என்று பரிதாபமாகச் சொன்னான் திருடன்.
நீ திருந்தி விட்டதாகச் சொல்கிறாய். பெருந்தன்மையுடன் பொற்காசுகளை எனக்குத் தருவதாகச் சொல்கிறாய். பாட்டை நிறுத்துகிறேன், என்ற அவன் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தான்.
உடலெங்கும் குருதி சொட்டச் சொட்ட எழுந்தான் திருடன். சொன்னபடியே அவனிடம் பொற்காசுப் பையைத் தந்தான்.
அதைப் பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.
அவன் கண்ணுக்கு மறைந்ததும் திருடன், டேய்! அயோக்கியப் பயலே! என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா? நீ விரைவில் கொடுமையாக இறக்கப் போகிறாய், என்று திட்டினான். குறுக்கு வழியாகப் பக்கத்தில் இருந்த நகரத்தை அடைந்தான்.
நீதிபதியிடம் சென்ற திருடன், ஐயா! நான் உழைத்துத் தேடிய பொற்காசுகளைக் காட்டில் ஒரு திருடன் பறித்துக் கொண்டான். நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும், என்றான்.
அந்தத் திருடன் எப்படி இருப்பான்? என்று கேட்டார் நீதிபதி.
எப்படியும் இந்த நகரத்திற்கு அவன் வருவான். தோளில் வில், கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான். எளிதில் கண்டுபிடித்து விடலாம், என்றான் திருடன்.
வீரர்களை அழைத்தார் நீதிபதி. இவன் குறிப்பிடும் ஆள் கிடைத்தால் கைது செய்து இழுத்து வாருங்கள், என்று கட்டளை இட்டார்.
நடக்கப் போவதை அறியாத அவன் நகரத்திற்குள் நுழைந்தான். வீரர்கள் அவனைக் கைது செய்தனர். நீதிபதியின் முன்னர் அவனை இழுத்து வந்தனர்.
அவனைப் பார்த்ததும் திருடன், நீதிபதி அவர்களே! இவன் தான் திருடியவன், இவனிடம் என் பொற்காசுப் பை இருக்கலாம், என்று கத்தினான்.
வீரர்கள் அவனைச் சோதனை செய்தனர். பொற்காசுப் பை கிடைத்தது.
உடனே அவன், ஐயா! நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப் பொற்காசுகளை எனக்குத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள், என்றான்.
முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்க்கு யாராவது இவ்வளவு பொற்காசுகளைத் தருவார்களா? நீ பொய் சொல்கிறாய். நீ திருடன் தான். இவனைத் தூக்கில் போடுங்கள், என்று கட்டளை இட்டார் நீதிபதி.
அங்கிருந்த தூக்கு மேடைக்கு அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட
ஒரு காவலன் வந்தான்.
நீதிபதி அவர்களே! இறப்பதற்கு முன் என் கடைசி ஆசை. இந்தப் புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும்.. அனுமதி தாருங்கள், என்று கேட்டான் அவன்.
புல்லாங்குழலை அவனிடம் தருமாறு கட்டளை இட்டார் நீதிபதி.
அங்கிருந்த திருடன். ஐயோ! வேண்டாம். புல்லாங்குழலை அவனிடம் தராதீர்கள். எல்லோருக்கும் ஆபத்து என்று கத்தினான்.
சாகப் போகிறவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப் போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிபதி.
அப்படியானால் என்னை இந்தத் தூணோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். பிறகு அனுமதி கொடுங்கள், என்றான் திருடன்.
உடனே திருடன் தூணில் கட்டப்பட்டான்.
புல்லாங்குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கு ஏற்ப எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். காவலன் கையில் இருந்த தூக்குக் கயிறு நழுவிக் கீழே விழுந்தது.
அவன் இசைப்பதின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினார்கள். தூணில்
கட்டப்பட்டு இருந்த திருடனும் கை கால்களை ஆட்டினான்.
பாடுவதை நிறுத்து. உன்னை விடுதலை செய்கிறேன், என்று ஆடிக் கொண்டே கெஞ்சினார், நீதிபதி.
பாடுவதை நிறுத்தினான் அவன். எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
திருடனின் அருகே சென்ற அவன், உண்மையைச் சொல்.. பொற்காசுகளை நான் உன்னிடம் இருந்து திருடினேனா? அல்லது நீயாக எனக்குத் தந்தாயா? மீண்டும் இசைக்கத் தொடங்குவேன், என்றான்.
கட்டப்பட்டு இருந்ததால் மூச்சுத் திணறிய திருடன், நானாகத்தான் தந்தேன். நான்தான் திருடன். வீணாக இவன் மீது பொய்க் குற்றம் சுமத்தினேன், என்றான்.
உண்மையை அறிந்த நீதிபதி அந்தத் திருடனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார்.
எல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்குப் புறப்பட்டான்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Tuesday 12 January 2021
பால.ரமேஷ். தினம் ஒரு குட்டிக்கதை .|| KALVIKURAL MORAL STORY:
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...