அந்த அணியில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், மொஹீந்தர் அமர்நாத், திலீப் வெங்க்சர்க்கார் மற்றும் சையத் கிர்மானி ஆகிய ஐவர் மட்டுமே அந்த சமயத்தில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள்.
‘எவனா இருந்தா என்ன மச்சி? வா பாத்துக்கலாம்’ அப்படிங்கற மாதிரி பயமறியாத இரண்டு இளங் காளைகள் ஸ்ரீகாந்த் மற்றும் ரவி சாஸ்திரி; திறமை கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும், ‘வெட்டிட்டு வாடா’ன்னு கேப்டன் சொன்னா வேரோடு தூக்கிட்டு வரும் மூர்க்கத்தனமான, கடின உழைப்பாளியான யஷ்பால் ஷர்மா; எவ்வளவு அடிச்சாலும் டீமுக்காக தாங்கக் கூடிய களம் பல கண்ட கடும் போராளி மதன்லால்: காலைல ஏதோ ஜாக்கிங் போற மாதிரி மெதுவா ஓடி வந்து, அத விட மெதுவா பந்து வீசும் பல்வீந்தர் சந்து; ‘நாங்க எப்போ, எங்கே, என்னிக்கு சூப்பரா ஆடுவோம்னு யாருக்கும் தெரியாது, ஏன் எங்களுக்கே தெரியாது’ அப்படின்னு அவங்களையும் சேர்த்து யாருமே எதிர்பார்க்காத போது அசத்தலா பந்து வீசும், பேட்டிங் செய்யும் ரோஜர் பின்னியும் சந்தீப் பட்டீலும்; ‘ஐயா, எங்கப்பாவுக்கு ஒரு பேர் இருக்கு’ என்று தன் அப்பாவோட அரசியல் பின்புலத்தால வாய்ப்பு பெற்றதாக சொல்லப்படும் அரைகுறை ஆல்ரவுண்டர் கீர்த்தி ஆசாத்; ‘ஏய்! இவரும் ப்ளேயர் தான், இவரும் ப்ளேயர் தான்’ அப்படின்னு உப்புக்கு சப்பாணியாக டீம் வண்டியில் ஏற்றி விடப்பட்ட சுனில் வல்சன்.
இப்படி ஒரு டீமை வெச்சிக்கிட்டு, உலக கிரிக்கெட்டையே கிடுகிடுக்க, நடுநடுங்க வைத்துக் கொண்டிருந்த கிரிக்கெட் கிங்கரர்களான வெஸ்ட் இண்டீசை ஒரு முறை அல்ல, இரண்டு முறை தோற்கடிப்பது சாதாரண விஷயமா? அதுவும் உலகக் கோப்பையில். ஆனால், அதை தான் செய்தது மேற்படி இந்திய அணி.
1983-ல் இங்கிலாந்துல அந்த உலகக் கோப்பை ஆரம்பிச்ச போது இந்திய அணிய யாரும் ஒரு பெரிய பொருட்டா நினைக்கல. ஏன்னா அதுக்கு முன்னால 75 மற்றும் 79-ல நடந்த உலகக் கோப்பை போட்டிகள்ல நம்மாளுங்க ஆடின லட்சணம் அப்படி! இங்கிலாந்தில் வெளியாகும் பாரம்பரிய Wisden கிரிக்கெட் பத்திரிக்கையோட ஆசிரியரான டேவிட் ஃப்ரித், ‘இந்தியாவை உலகக் கோப்பைலேந்தே நீக்கணும், அடுத்த முறை அவங்கள தகுதிச்சுற்றுல ஆடி ஜெயிச்சிட்டு வர சொல்லணும்’ அப்படின்னு எழுதினாரு. ஆனா ‘இந்தியா ஒரு dark horse, அதாவது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெயிக்க கூடிய ஒரு குதிரை’ அப்படின்னு ஆஸ்ட்ரேலிய அணி கேப்டன் கிம் ஹ்யூஸ் மட்டும் ஆரூடம் சொன்னார். ‘நைட்டு கொஞ்சம் ஓவரா அடிச்சிருப்பாரோ’ன்னு எல்லாரும் அவர ஓட்டினாங்க.
அந்த உலகக் கோப்பைக்கு ஏழெட்டு மாசம் முன்னாடி வரைக்கும் ‘இந்த ஒன் டே மேட்சுன்னா, வேக வேகமா ரன் அடிச்சி, ஓடியாடி விழுந்து ஃபீல்டிங் பண்ணி விளையாடுவாங்களே அது தானே?’ அப்படின்னு வெள்ளந்தியா கேக்கற நிலைமைல தான் நம்மாளுங்க இருந்தாங்க. ஆனா ஹரியானா அதிரடிப் புயல் கபில்தேவ் இந்திய ஒன் டே டீமுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதும், அணியின் அணுகுமுறைல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. 1979 உலகக் கோப்பைல நமக்கு தண்ணி காட்டின இலங்கை அணிய, இந்தியாவுக்கு வரவழைச்சு நல்லா ரொப்பி அனுப்பினாரு கேப்டன் கபில்தேவ். அது மட்டும் இல்லாம, 1983 உலகக் கோப்பைக்கு ஓரிரு மாசம் முன்னாடி வெஸ்ட் இண்டீசுக்கு போய் அவங்க ஊர்லேயே ஒரு ஒன் டே மேட்ச்ச ஜெயிச்சு காமிச்சாரு. ஆனா கூட ‘ஏதோ அவங்க அசந்திருந்த நேரமா பார்த்து ஜெயிச்சிட்டோம்’ அப்படிங்கற லெவல்ல தான் இருந்திருக்கு இந்திய டீமோட எண்ணம்.
சொல்லி வெச்ச மாதிரி 1983 உலகக் கோப்பைல முதல் போட்டியே மறுபடியும் அதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரா விளையாட வேண்டிய சூழ்நிலை. யாருமே எதிர்பார்க்காத வகைல அந்த போட்டில இந்தியா ஜெயிச்சது, அடுத்த இரண்டு வாரத்துல இந்திய கிரிக்கெட்டையே புரட்டி போடப் போகும் ஒரு மாபெரும் நிகழ்வுக்கான அறிகுறியா இருந்தது.
அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். ஜிம்பாப்வேக்கு எதிரா ஒன் மேன் ஆர்மியாக கபில்தேவ் 175 ரன்கள் அடித்தது; இரண்டாவது ரவுண்ட் ராபின் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவை தோற்கடித்தது; அரை இறுதி போட்டில இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய அணியை கேலி பேசிய அந்த நாட்டு ஊடகங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் முகத்துல கரி பூசியது; இதெல்லாம் காலாகாலத்துக்கும் மறக்கவே முடியாது.
இறுதிப் போட்டில மறுபடியும் இந்தியாவும் வெஸ்ட் இண்டீசும். என்ன தான் இந்தியா சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை வந்திருந்தாலும், ஊடகங்கள், ரசிகப் பெருமக்கள் எல்லாருமே இந்தியாவுக்கு ‘வாய்ப்பே இல்ல ராஜா’ அப்படின்னு தான் நினைச்சாங்க, சொல்லவும் சொன்னாங்க. ‘சும்மா சும்மா தோக்க வெஸ்ட் இண்டீஸ் என்ன சும்பையா? போவியா வேலைய பாத்துக்கிட்டூ?’ அப்படின்னு தான் எல்லாருமே சொன்னாங்க.
அதுக்கேத்த மாதிரி முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஸ்ரீகாந்தின் அதிரடி ஆரம்பத்தையும் மீறி, 183 ரன் அடிச்சு சுருண்டதும், ‘எல்லாம் முடிஞ்சு போச்சு, வண்டிக்கு சொல்லி விடுங்கடா, எடுத்துட்டு போய் அடக்கம் பண்ணிருவோம்’னு எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க. ஆனா கபில்தேவ் மட்டும் அந்த கட்டத்துல கூட நம்பிக்கை இழக்காம ‘இவ்ளோ தூரம் வந்துட்டோம், இன்னும் ஒரு ஐம்பது, அறுபது ஓவர் முடிஞ்ச வரைக்கும் போராடுவோம்’னு டீம் மீட்டிங்ல பேசி எல்லாரையும் உசுப்பேத்தி விட்டிருக்காரு. வெஸ்ட் இண்டீஸ் டீமுக்கும் அவங்க ரசிகர் பட்டாளத்துக்கும் அப்பவே கோப்பைய ஜெயிச்ச மாதிரி ஒரு சந்தோஷம். முப்பது ஓவர்லேயே முடிஞ்சிரும்னு தான் எல்லாரும் நினைச்சாங்க.
ஆனா நடந்ததென்னவோ வேற. கில்லாடி ஓப்பனரான கார்டன் க்ரீனிட்ஜையே ஏமாற்றி சந்துல சிந்து பாடினார் பல்வீந்தர் சந்து. ‘பயபுள்ள பயந்து போய் பந்த எங்கேயோ கொண்டு போய் போடறாப்பல’ அப்படின்னு நினைச்சு க்ரீனிட்ஜ் அந்த பந்த ஆடாம விட, அந்த பந்து ‘நல்லா சரக்கடிச்சிட்டு நடந்து போறவன் திடீர்னு சைடு வாங்கி குறுக்கால வர மாதிரி’ படால்னு உள்ளே பூந்து ஸ்டம்ப தட்டி விட, ஆரம்பிச்சது கொண்டாட்டம்.
ஆனா அடுத்ததா உள்ளே இறங்கினவரு சாட்சாத் அந்த கிரிக்கெட் கடவுள்களில் ஒருத்தரான விவ் ரிச்சர்ட்ஸ். ‘என்னடா சத்தம் இங்கே? சீக்கிரம் வந்து போடுங்கடா, சட்டு புட்டுன்னு சோலிய முடிச்சிட்டு போய் பார்ட்டி கொண்டாடணும் இல்ல?’ அப்படின்னு மட்டைய சுழட்டிக்கிட்டே வந்து ஒரு அரை மணி நேரம் பிரிச்சு மேய்ஞ்சாரு மனுஷன். குறிப்பா மதன்லால குறி வெச்சு தாக்கினாரு. ஸ்கோர் கடகடன்னு ஏற ஆரம்பிச்சதும் ‘இந்த வயித்தெரிச்சல இங்கே உக்காந்து பாக்கணுமா? வாங்கப்பா போலாம்’ன்னு கவாஸ்கர் மற்றும் இன்னும் ஓரிரு ப்ளேயர்களின் மனைவிமார்கள் ஹோட்டலுக்கு திரும்பி போயிட்டாங்க.
ஆனா அஞ்சா நெஞ்சன் மதன்லால் வழக்கத்த விட அரை அடி அதிகமா எகிறி குதிச்சு, வழக்கத்த விட மெதுவா ஒரு பந்த வீச, ‘டேய் நாராயணா, இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா’ன்னு ரிச்சர்ட்ஸ் அத அசால்ட்டா அடிக்க, அது மட்டைல சரியா படாம, பவுண்டரிய நோக்கி பறக்காம, வானத்த நோக்கி பறக்க ஆரம்பிச்சது. ‘ஆஹா தப்பான ஷாட் ஆடிட்டோமேன்னு நினைச்சுக்கிட்டே, யார் அந்த பந்த பந்த கேட்ச் பிடிக்க போறாங்கன்னு நினைச்சுக்கிட்டே பார்த்தேன். அது கபில்தேவ்னு தெரிஞ்சதும், என் ஆட்டம் க்ளோஸ்னு தெரிஞ்சு போச்சு, மனுஷன் சுலபத்துல கேட்ச் விட மாட்டாரு’ன்னு பின்னாடி ரிச்சர்ட்ஸ் ஒரு பேட்டில சொன்னார். ஆனா ரிச்சர்ட்ஸ் அவுட் ஆகறத நம்ம ஊர் டிவில பார்க்க முடியாதபடி, அப்போன்னு பார்த்து ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’னு கையால எழுதின ஸ்லைட போட்டு கடுப்பேத்தினாங்க நம்ம தூர்தர்ஷன்.
கொஞ்ச நேரத்துல ஹெயின்ஸ், லாயிட், கோம்ஸ், பாக்கஸ்னு ஒவ்வொரு வெஸ்ட் இண்டீஸ் ப்ளேயரா கோயில்ல லைன்ல நின்னு பிரசாதம் வாங்கிட்டு போற மாதிரி ‘ஜருகண்டி’ ஆக, ஆட்டத்த டிவில பார்த்துக்கிட்டுருந்த எங்களுக்கெல்லாம் தலையும் புரியல, காலும் புரியல. ஜெஃப் டூஜானும் மார்ஷலும் கொஞ்ச நேரம் தட்டி, தட்டி ஸ்கோர ஏத்த ஏத்த, எங்களுக்கு டென்ஷன் ஏறிக்கிட்டே இருந்தது. ஒரு கட்டத்துல டூஜான் ‘எங்கேயோ போற மாரியாத்தா, என் மேலே வந்து ஏறாத்தா’ன்னு எங்கேயோ போற பந்த ஆட போய், அத ஸ்டம்புல வாங்கி விட்டுக்கிட்டாரு. கடைசில மைக்கேல் ஹோல்டிங் விக்கெட்ட மொஹீந்தர் அமர்நாத் எடுத்ததும், குதியோ குதின்னு குதிச்சோம். எங்க தெருவுல யார் வீட்டுலேயோ பட்டாசெல்லாம் வெடிச்சாங்க. மறக்க முடியாத ஒரு இரவு அது.
கடைசில ஆஸ்ட்ரேலிய கேப்டன் கிம் ஹ்யூஸ் சொன்னது மாதிரியே நடந்தது. ஆங்கிலத்தில் eating one’s own words என்று ஒரு idiom உண்டு. அதாவது தான் சொன்னது முற்றிலும் தவறு என்று அவமானத்தோடு ஒத்துக் கொள்வது. அந்த வகையில் இந்திய அணியைப் பற்றி இழிவாக எழுதிய Wisden ஆசிரியர் டேவிட் ஃப்ரித் தான் சொன்னதை அவமானத்தோடு வாபஸ் வாங்கி, உண்மையாகவே அந்த கட்டுரை பிரசுரமான பக்கத்தை கிழித்து வாயில் போட்டு மென்று, கூடவே கொஞ்சம் wine-ஐ குடித்து அந்த காகிதத்தை முழுங்கினார்!
அதுக்கப்புறம் ஒன் டே கிரிக்கெட்டைப் பற்றிய இந்திய அணியின் பார்வையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பார்வையும் முழுசா மாறியது. ஆனா அஞ்சு மாசம் கழிச்சு, இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் ‘வேர்ல்ட் கப்பா டா ஜெயிக்கறீங்க வேர்ல்ட் கப்பு? இந்தா வாங்கிக்க’ என்று இந்திய அணியை கும்மாங்குத்து குத்திட்டு போனாலும், இந்தியர்கள் கிரிக்கெட் ஆடும் முறை தலைகீழாக மாறியது. இந்திய அணிய நிறைய ஒன் டே போட்டிகள் ஆட வெச்சு, நம்ம கிரிக்கெட் வாரியமும் நல்லா கல்லா கட்ட ஆரம்பிச்சது.
அதன் பிறகு, பல உலகக்கோப்பைகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி, 2003-ல் இறுதிப் போட்டியில் தோற்று, 2011-ல் தோனியின் தலைமையில் கோப்பையையே கூட வென்றது. ஆனால் எந்த ஒரு விஷயமும் முதல் முறையாக நடந்ததையும், அது நடந்த சூழ்நிலையையும், அதை முதன் முதலில் சாதித்தவரையும் நம்மால் மறக்கவே முடியாது.
அந்த வகையில் 38 ஆண்டுகளுக்கு முன், கபில்தேவ் தலைமையில் இந்திய அணி பெற்ற அந்த வரலாற்று வெற்றி என்றுமே நம் மனதுக்கினிய ஒரு சிறப்பான, தரமான சம்பவமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
பகிர்வு









