தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில அறிவிக்கப்பட்ட 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மே 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடியே நடக்குமா என்பது குறித்த கேள்வியிருந்தது. இந்நிலையில் பிளஸ் 2 செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 செய்முறை தேர்வு இந்த மாதம் 17 ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. குறிப்பாக இயற்பியல், வேதியல், உயிரியல் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில், 'ஒவ்வொரு குழுவின் செய்முறை தேர்வுக்கு முன்னரும் பின்னரும் அறையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஆய்வக அறையில் உள்ள அனைத்து கருவிகளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். தீப்பிடிக்க கூடிய பொருட்களுக்கு அருகில் சானிடைசரை வைக்கக்கூடாது. வேதியல் செய்முறை தேர்வின் போது பிப்பெட்டுக்கு பதிலாக ப்யூரெட் பயன்படுத்தலாம். கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, குணமடைந்த பின் தனியாக செய்முறை தேர்வு நடத்தலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் பள்ளி இருந்தால் செய்முறை தேர்வை வேறு பள்ளியில் நடத்தலாம்' உள்ளிட்ட நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.