தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்ட நிலையில், அடுத்த கல்வியாண்டில் ஆவது பள்ளிகளை திறந்து முறையான தடுப்பு நடவடிக்கைகளுடன் நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனபதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டன. வகுப்புகள், தேர்வுகள் என அனைத்து வித செயல்பாடுகளும் ஆன்லைன் வழியாக நடைபெற்றது. பெற்றோர்களும் மாணவர்களின் நலன் கருதி நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8ம் தேதி தொடங்கி 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. பின்னர் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்த காரணத்தால் பள்ளிகள் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் மே 5ம் தேதி முதல் தொடங்க இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுஅறிவிப்பு வெளியாகும் வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது
இதனால் செய்முறை தேர்வுகள் முடிந்தவுடன் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற மே 1ம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிய தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இவ்வாறு நடப்பு கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள் செயல்படவில்லை. இடையில் சில நாட்களுக்கு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் எடுக்கப்பட்டு நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதனால் அவர்களின் கற்றல் திறன் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது கொரோனா பரவல் 2வது அலை தீவிரமடைந்து வருவதால், அடுத்த கல்வியாண்டில் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் தொடர அதிக வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் நேரடி வகுப்புகள் அளவிற்கு இவை மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்காது என்பது தான் நிதர்சனம்.
எனவே அடுத்த புதிய கல்வியாண்டில் ஆவது 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து உரிய கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாடங்களை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.