எம்.எஸ்.எம்.இ., சம்பார்க் திட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2018-ல் தொடங்கி வைத்தார். வேலை தேடுபவர்கள் மற்றும் வேலைக்கு ஆள் தேடுபவர்கள் இந்த இணையத்தின் மூலம் பயன்பெறலாம். மேலும், மத்திய அரசு 18 எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையங்கள் மூலம் ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. அவர்களையும் நிறுவனங்கள் இந்த இணையதளம் மூலம் பணிக்கு அமர்த்தலாம்.
ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு இந்த ஆண்டும் தொடர்வதால், வேலைக்காக பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும், வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளதாக தொழிற்துறையினர் கூறுகின்றனர். மே 21 நிலவரப்படி, அரசின் இணையதளத்தில் 707 பணியிடங்களுக்கு 4,71,922 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே எம்.எஸ்.எம்.இ.,க்கான தேசிய நிறுவனத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 148% உயர்ந்துள்ளது.
கடந்த 2020 நிதியாண்டில் 154 பயிற்சித் திட்டங்களில் 3,999 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். நடப்பு நிதியாண்டில் இதுவரை 95 பயிற்சித் திட்டங்களின் கீழ் 9,935 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.