இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 72 லட்சம் பேர் நாய்கடிக்கு ஆளாகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு 20,000 பேர்.
இதன் விளைவாக இந்தியாவில் தினசரி 60 பேர் மற்றும் ஆண்டுக்கு 18,000 முதல் 20,000 பேர் வெறிநாய்க்கடியால் இறக்கின்றனர். நாட்டில் வெறிநாய்க்கடியால் ஏற்படும் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள்.
இந்தியாவில் பாம்பு கடி சம்பவங்கள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை; இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் 47,000 பேர் பாம்பு கடியால் இறக்கின்றனர். இது வெறிநாய்க்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
பாம்பு கடியால் தினமும் சுமார் 130 மரணங்கள் நிகழ்கின்றன. அதிலும் கிராமப்புற மற்றும் பழங்குடியின பகுதிகளில் தான், பெரும்பாலான பாம்புக்கடி சம்பவங்கள் மற்றும் இறப்புகள் நடக்கின்றன.
அமெரிக்காவில், ஆண்டுதோறும் 10 முதல் 12 இறப்புகள் மட்டுமே வெறிநாய்க்கடி காரணமாக பதிவாகின்றன. அமெரிக்க மக்கள் தொகை இந்திய மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்காக இருந்தாலும், அந்தத் தரத்தின்படி, வெறிநாய்க்கடி இறப்புகளில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இந்தியாவால் தடுக்க முடியும்.
இதேபோல், ஆஸ்திரேலியாவில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான விஷப் பாம்புகள் உள்ளன, ஆனால் அங்கு பாம்பு கடியால் ஆண்டுதோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களில் மட்டுமே உள்ளது.
நாய், பாம்பு மற்றும் தேள் கடி மரணங்களைத் தடுப்பதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை இவை அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.
விலங்குகள் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு, ரேபிஸ் தடுப்பூசியின் அதிகரிப்பு, பாம்பு எதிர்ப்பு விஷம் மற்றும் பிரசோசின் (prazosin- தேள் கடிக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சை) ஆகியவை ஆகியவை இந்தியாவில் இந்த இறப்புகளை வெகுவாகக் குறைக்கும்.
நாய் கடிக்கு என்ன செய்ய வேண்டும்?
ரேபிஸ் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளவை மற்றும் முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன. நாய் கடித்தால், அடிவயிற்றில் 14 ஊசிகளை செலுத்த வேண்டும் என்ற தவறான எண்ணம் இன்னும் பலருக்கு உள்ளது. அது வெகு காலத்திற்கு முன்பே மாறிவிட்டது.
இப்போதுள்ள ரேபிஸ் தடுப்பூசிகள் அதிக திறன் வாய்ந்தவை மற்றும் பாதுகாப்பானவை. இந்த தடுப்பூசி, நாய் கடித்த நாள் மற்றும் 3, 7, 14 மற்றும் 28 ஆகிய நாட்களில் ஐந்து ஷாட்கள் செலுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி தெரியாது, மேலும் அவை அருகிலுள்ள அரசு சுகாதார மையங்களில் எளிதில் கிடைக்காது.
தனியார் மையங்களில் பணம் செலுத்த முடியாமல் ஏழைகள் சில நேரங்களில் தடுப்பூசி போடுவதில்லை. சரியான நேரத்தில், சரியான முதலுதவி ரேபிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.
உதாரணமாக, கடித்த இடத்தை சுமார் பத்து நிமிடங்கள் ஓடும் தண்ணீரில் சோப்புடன் கழுவ வேண்டும். கடித்த இடத்தில் கட்டு அல்லது துணி எதுவும் கட்ட வேண்டாம், அதை திறந்து விடவும்.
பாம்பு கடிக்கு
நாட்டில் உள்ள பாம்புகள் மற்றும் தேள்களில் ஒரு சிறிய விகிதத்தில் மட்டுமே விஷம் உள்ளது. இருப்பினும், பலர் நவீன மருத்துவத்தின் உதவியை நாடுவதை விட பாரம்பரிய மற்றும் நிரூபிக்கப்படாத சிகிச்சை அணுகுமுறையை நாடுவதால், அலட்சியம் காரணமாக ஓரளவு இறப்புகள் நிகழ்கின்றன.
விஷப்பாம்பு, தேள் கடித்தால் ஏற்படும் அறிகுறிகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாம்பு கடித்த பல் தடம் முக்கால் முதல் ஒரு அங்குலம் இருந்தால், அது விஷப் பாம்பாக இருக்கலாம். நச்சுத்தன்மையைப் பொறுத்து, விஷப் பாம்புகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: நியூரோடாக்ஸிக் மற்றும் ஹீமோலிடிக். (neurotoxic and haemolytic)
ஒரு நியூரோடாக்ஸிக் பாம்பு கடித்தால் கண் இமைகள் கீழ்பக்கம் (Ptosis) இழுத்து விடும். கடித்த பிறகு இதுவே ஒரு நபரின் ஆரம்ப அறிகுறியாகும்.
ப்டோசிஸைத் தொடர்ந்து உணவு விழுங்குவதில் சிரமம் அல்லது தண்ணீரைக் குடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது, இது சுவாச அறிகுறிகளாக (சுவாசிப்பதில் சிரமம்) முன்னேறலாம் மற்றும் இறுதியாக பக்கவாதம் ஏற்படும்.
இந்த அறிகுறிகள் சில மணிநேரங்களில் உருவாகின்றன. எனவே, இந்தக் காலக்கட்டத்தில் தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்தால், உயிரைக் காப்பாற்றலாம்.
ஹீமோலிடிக் விஷ பாம்புகள் கடித்ததன் முக்கிய அறிகுறி, கடித்த இடத்தில் வீக்கம் ஏற்படும். விஷமுள்ள பாம்பு கடித்தால், இந்த அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால், அந்த நபரை மருத்துவர் அல்லது சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
மருத்துவமனை அடைவதற்கு முன், பாம்பு கடித்த இடத்தில் ஒரு துணியை கட்டவும், இதனால் விஷம் மேலும் மேலும் பரவாமல் இருக்கும். பாதிக்கப்பட்ட நபர் நடக்கவோ ஓடவோ கூடாது. இவ்வாறு செய்வதால் விஷம் வேகமாக பரவும். விஷப்பாம்பு கடித்த, முதல் ஓரிரு மணி நேரத்தில் சிகிச்சை தொடங்கினால், பயப்பட ஒன்றுமில்லை.
பாம்பு விஷத்தின் விளைவை எதிர்கொள்வதில் பாம்பு எதிர்ப்பு விஷங்கள் (Anti-snake venoms) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேள் கடிக்கு
அதிகப்படியான வியர்வை, பதட்டம், வாந்தி மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஒரு விஷ தேள் கடியின் ஆபத்தான அறிகுறிகள். தேள்களின் மிகச் சிறிய பகுதியே விஷமானது. தேள் கடித்தால், அதன் விஷம் இதயத்தைப் பாதிக்கிறது மற்றும் இதயம் தொடர்பான அறிகுறிகளால் மரணங்கள் நிகழ்கின்றன. இருப்பினும், பிரசோசின் (Prazosin) என்ற மருந்து தேள் கடி சிகிச்சைக்கு ஒரு அதிசயம் போல் செயல்படுகிறது. தேவையானது எல்லாம் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது மட்டும்தான்.
நாய், பாம்பு, தேள் கடியால் ஏற்படும் ஒவ்வொரு மரணமும், அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தடுக்க முடியும். ரேபிஸ் தடுப்பூசி, பிரசோசின் ஊசி மற்றும் பாம்பு எதிர்ப்பு விஷம் ஆகியவை எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை உயிர் காக்கும் மருந்துகள். சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இவை 24X7 தடையின்றி இலவசமாக கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் - கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து உறுப்பினர்கள், நகர்ப்புறங்களில் உள்ள கவுன்சிலர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தங்கள் வசம் உள்ள நிதியை பயன்படுத்தி இந்த பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு விலங்கு கடி மேலாண்மை குறித்து தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும்.
முனிசிபல் கார்ப்பரேஷன்கள் மற்றும் மாநில அரசுகளில் உள்ள அதிகாரிகள் ரேபிஸ் தடுப்பூசிகள், பாம்பு விஷ எதிர்ப்பு மற்றும் பிற மருந்துகளை எளிதில் கிடைக்கச் செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும். ஒருங்கிணைந்த செயல்கள் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும், அந்த உயிர்களைக் காப்பாற்ற நாம் அனைத்தையும் செய்ய வேண்டும்.