பெரம்பூரில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சிறுவன், சளிக்கு மாத்திரை சாப்பிட்டு இறந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூரில் தீபக் என்ற எட்டாம் வகுப்பு சிறுவனுக்கு லேசான சளி இருந்துள்ளது. அவனின் தந்தை சிறுவனுக்கு சளி மாத்திரையில் பாதியைக் கொடுத்துள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மயக்கமடைந்துள்ளான். மருத்துவமனையில் சிறுவனைச் சோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
சளிக்கு மாத்திரை சாப்பிட்டால் இறக்கும் அபாயம் ஏற்படுமா என்ற கேள்விக்கு சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் கூறியதாவது...
``சளி பாதிப்பு மோசமாக இருந்து, அவர்கள் மாத்திரையை தாமதமாகக் கொடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. கிருமிகளின் தாக்கம் மோசமானதன் காரணமாகவும் சிறுவன் இறந்திருக்கலாம். இதயம் மற்றும் நுரையீரலில் திடீரென பிரச்னை ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
மாத்திரைபொதுவாக, மருந்து அலர்ஜியினால் அனாபிலாக்டிக் ஷாக் (anaphylactic shock) ஏற்படும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இறப்பு இதனால்தான் ஏற்பட்டிருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது. இந்த மாதிரியான இறப்புகளுக்குக் கட்டாயம் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். அதில்தான் உண்மை காரணத்தை அறிய முடியும். அதற்குள் நாம் மருத்துவர்களையோ, மருந்தையோ, மருந்துக் கடைகளையோ தேவையில்லாமல் குறை சொல்லக்கூடாது.
மருத்துவர்களிடம் பல நேரங்களில் 'pulmonary edema' என்று மிகவும் மோசமான நிலையில் நோயாளிகளை அழைத்து வருவார்கள். அவர்களுக்கு லாசிக்ஸ் (Lasix) என்ற ஊசியைப் போடுவோம். இந்த ஊசியினால் தண்ணீர் கீழிறங்கி, நுரையீரலில் காற்று நிரம்பினால் நோயாளி பிழைத்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்படி நடக்கவில்லை என்றால் நோயாளிகள் இறந்துவிடுவார்கள். ஆனால், மக்கள் வரும்போது மூச்சு இருந்தது, மருத்துவர் ஊசி போட்ட பிறகுதான் இறந்துவிட்டார் என்று கூறிவிடுவார்கள். அதனால், அவசர நேரங்களில் சிறிய மருத்துவமனைகள் இந்த ஊசியைப் போடத் தயங்குகிறார்கள்.
ஊசி`மோசமான கையெழுத்துடன் மருந்துச்சீட்டு' - 3 டாக்டர்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம்!இந்த மாதிரி சம்பவங்களில், ஆதாரங்கள் இல்லாமல் மாத்திரையை மட்டுமே குற்றம் சொல்லக்கூடாது. முதலில் சிறுவனின் பெற்றோரிடம் அவன் என்ன சாப்பிட்டான் என்று கேட்க வேண்டும். ஒருவேளை, அவன் சத்தமில்லாமல் ஏதாவது மருந்தைக் குடித்து தற்கொலைக்குக்கூட முயன்றிருக்கலாம். உதாரணமாக, ரயில் நிலையத்தில் கொலை நடந்த சத்யஸ்ரீயின் தந்தை மாரடைப்பில் இறந்ததாக முதலில் தகவல் வெளியானது. பிறகுதான் அவர் மதுபானத்தில் மருந்து கலந்து குடித்ததாகத் தெரிய வந்தது. அதன்பின்னர் தான் அவருக்குப் பிரேதப் பரிசோதனை நடந்தது. இச்சம்பவங்களில் நவீன மருந்துகளையும், நவீன மருத்துவத்தையும் தேவையில்லாமல் குறை கூறிக்கொண்டிருக்கிறோம்.
சில மருந்துகளுக்கு அனாபிலாக்டிக் ஷாக் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் நரம்பில் செலுத்தப்படும் மருந்துகளுக்குத்தான் அந்த பாதிப்பு ஏற்படும். அந்தச் சமயங்களில், நோயாளிகள் மருத்துவமனையில் இருந்தாலோ அல்லது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாலோ மாற்றுமருந்து கொடுத்து உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யமுடியும்.
மருந்துடெஸ்ட் டோஸ் போட்ட பின்னர் இந்த மருந்துகளைச் செலுத்தினால் அனாபிலாக்டிக் ஷாக் ஏற்படாது என்று அறிவியல் கூறுகிறது. டெஸ்ட் டோஸ் போட்டால்கூட இறக்கலாம் என்பதால் நாம் அதையும் உறுதியாகக் கூற முடியாது.
அனாபிலாக்டிக் ஷாக் என்றால் தொண்டையில் உள்ள ரத்தக்குழாய்கள் விரிந்து, காற்றுப்பாதை அடைத்து மூச்சுத் திணறல் ஏற்படும். இந்த நேரங்களில் மருத்துவமனையில் இருந்தாலோ அல்லது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாலோ நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு ஊசி போட்டுக் காப்பாற்றலாம். அனாபிலாக்டிக் ஷாக்கால் இறப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது
மருந்துக் கடைகளில் மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பது ஓ.டி.சி (Over the Counter) என்று அழைக்கப்படும். மருந்துக்கடை நடத்த மருத்துவர் மற்றும் மருந்து ஆளுநர் இல்லாதவர்களுக்கு லைசன்ஸ் வழங்கக்கூடாது. மருத்துவர் மற்றும் மருந்து ஆளுநர் நடத்தும் மருந்துக்கடைகளில் தரமற்ற மருந்துகளை விற்கமாட்டார்கள்.
ஆப்பிரிக்காவில் சளி மருந்துகளைத் தடை செய்துள்ளனர். சில மருந்து கம்பெனிகள் தரமான மருந்துகளை மட்டும் விற்றால் லாபம் அடையமுடியாது என்று ஓ.டி.சி மருந்துகளையும் தயாரிப்பார்கள். இந்த ஓ.டி.சி மருந்துகளை ஓர் அட்டை வாங்கினால் 10 மாத்திரை இலவசம் என்றுகூட விற்பனை செய்வார்கள். தரமற்ற இந்த மாத்திரைகளை எந்த கம்பெனி தயாரித்தது என்று கண்டுபிடிக்க இயலாது.
இதனால் நவீன மருத்துவர்களின் பதிவு எண் மற்றும் சீல் உள்ள மருந்துச் சீட்டுகளுக்கு மட்டும்தான் மருந்துக்கடைகள் ஆன்டிபயாடிக் மற்றும் இருமல் மருந்து கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும்" என்று கூறினார்.