பணி நிறைவு சான்று பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள மூன்று குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள் மின் இணைப்பு பெறலாம் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டுப் புதிய கட்டுமானம் அல்லது சரி செய்யும் பணிகளை மேற்கொள்ளும்போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெற்றால் தான் பெற முடியும்.
வீட்டுக்கு மின் இணைப்பு வாங்க விண்ணப்பப் படிவம்-1-ஐ வாங்கிப் பூர்த்தி செய்து தர வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்துக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சில அடிப்படைத் தகவல்களுக்கு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான உரிமையாளர் என்பதற்கான சான்றைக் கொடுக்க வேண்டும். அதாவது பத்திரப் பதிவுச் சான்றிதழ் போன்ற தேவையான, சட்டரீதியில் செல்லத்தக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இது தான் தற்போது தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெற விதிமுறையாகும்,.
புதிய வீடு கட்டுவோர் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவோர் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்று சான்றிதழ் அவசியம் ஆகும். அதாவது, தமிழ்நாட்டில் பொது கட்டட விதிகள் தொடர்பாக 2019ல் புதிய சட்டம் அமலுக்கு வந்தன. இதன்படி, 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அனுமதி பெறுவோர், விதிமுறைகளுக்கு உட்பட்டு, கட்டடங்களை கட்டியுள்ளனரா என்பதை உறுதி செய்ய, சி.சி., எனப்படும், பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் ஆகும்.
இந்த சட்டப்படி மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை கட்டுவோர், கட்டுமான பணி நிறைவு சான்று பெற வேண்டும். இந்தச் சான்று பெற்ற பிறகே, குடிநீர், வடிகால், மின்சார இணைப்புகள் வழங்கப்படும். பல இடங்களில், பணி நிறைவு சான்று வாங்காமல், மின் இணைப்புகள் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மின் இணைப்பு விதிகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசின் இந்த விதிகளை மக்களும் கட்டுமான நிறுவனங்கள் கடைபிடிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் விதிப்படி வீடுகளை கட்டினாலும், பணி நிறைவு சான்று கோரி உள்ளாட்சியில் விண்ணப்பிக்க வேண்டும்; உள்ளாட்சிகள் இரண்டு வாரம் அல்லது ஒரு மாதத்துக்குள் பைசல் செய்ய வேண்டும். ஆனால், அதிகாரிகள் உரிய நேரத்தில் முடிவு எடுக்காமல் கிடப்பில் போடுவதாகவும், மக்கள் மின் இணைப்பு பெற முடியவில்லை என்றும் கட்டுமான பணிகள் முடிந்தும், வீடுகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் பணி நிறைவு சான்று பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள மூன்று குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள் மின் இணைப்பு பெறலாம் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் 2019 விதி எண் 20 என் படி 12 மிட்டர் வரை உயரம் உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் (8070) பரப்பளவிற்குட்பட்ட அனைத்து வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு கட்டிட முடிவு சான்று இன்றி மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதி முதலான இணைப்புகள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டிடம் கட்டி முடிவு பெற்ற பின் மின் இணைப்பு வசதி பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்களை வரப்பெற்ற வண்ணம் உள்ளது. எனவே மேற்படி நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் முடிவு பெற்ற கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வசதி வழங்க ஏதுவாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களால் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது., இவ்வாறு நகராட்சி நிர்வாகம் வெளியிட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.