2018-19ம் ஆண்டு இதற்கென தனித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கு மேல் பழங்குடியின மக்கள் தொகை உள்ள வட்டங்களிலும், அல்லது குறைந்தபட்சம் 20 ஆயிரம் பழங்குடியினர் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும் ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேற்கூறிய மக்கள் எண்ணிக்கை அடிப்படையில், நாடு முழுவதும் 740 வட்டங்கள் கண்டறியப்பட்டன. தற்போது வரை, நாடு முழுவதும் 394 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,05,463 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன.
இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள 38,800 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மேற்கூறிய காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விதிமுறைகளை ( Recruitment Rules) பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கம் வெளியிட்டது. இதில், பதவியின் பெயர், பணியிடம், பணியின் வகைப்பாடு, ஊதிய விகிதம், பணி நிபந்தனை காலம், கல்வித் தகுதி முதலான நிலைகளில் பின்பற்ற வேண்டிய பொறுப்புகள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறையின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போதைய, விவரங்களைத் தெரிந்து கொள்ள emrs.tribal.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.









