அரசு தேர்வுகள் இயக்குனரின் கடிதம் ந .க.எண் 048873/பி1/20.12.2012
உங்கள் பள்ளி விபரங்களை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு, மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரலில் முடிகிறது. இந்த தேர்வை, 10.5 லட்Œம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், "சிடி'யில் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட மையங்களில் ஒப்படைத்து, பின் அவை, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.தேர்வுத் துறையில், பல்வேறு திட்டங்கள், இணையதளம் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரங்களையும், இணையதளம் வழியாக பதிவு செய்ய, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.மாணவ, மாணவியர், தங்களது பள்ளிகளில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, ஆசிரியர் உதவியுடன், தங்களைப் பற்றிய விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறுகள் இருந்தால், அதை உடனடியாக சரி செய்து கொள்ளவும், வழி செய்யப்பட்டுள்ளது. ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி, வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து, வசுந்தரா தேவி கூறுகையில், ""தேர்வுத் துறை இணையதளத்தில், ஒவ்வொரு பள்ளியும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள, "பாஸ்வேர்டை' பயன்படுத்தி, இணையதளத்திற்குள் சென்று, விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்,'' என,தெரிவித்தார்.இணையதளத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள், "நிக்' மையங்கள் மூலம் பெறப்பட்டு, சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.பின், மாணவ, மாணவியர் குறித்த விவர பட்டியல், தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த புதிய திட்டத்தால், தேர்வுப் பணிகள், பெரும் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இணையதள பதிவின் போது, மாணவ, மாணவியர்கவனிக்க வேண்டிய, முக்கிய அம்சங்கள் குறித்து, தேர்வுத் துறை கூறியிருப்பதாவது:
* தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, எந்த மொழிகளில் தேர்வை எழுதுகின்றனர் என்ற விவரங்களை, ஒன்றுக்கு பலமுறை, மாணவர்கள் சரிபார்க்க வேண்டும்.
* மாணவர்களின் புகைப்படங்கள் மிகவும் முக்கியம். சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை, "அப்லோட்' செய்ய வேண்டும்.
* உடல் ஊனமுற்றவர்களாக இருந்தால், "PH' என, குறிப்பிட வேண்டும். இந்த விவரங்கள் மிகவும் முக்கியம் என்பதால், தலைமை ஆசிரியர் மேற்பார்வையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* சரியான தகவல்களை பதிவு செய்தால்தான், பிழையில்லாத மதிப்பெண் பட்டியலை வழங்க முடியும். இதை உணர்ந்து, தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். தவறுகள் நடந்தால், சம்பந்தபட்ட தலைமை ஆசிரியர் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தேர்வுத் துறை கூறியுள்ளது. பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்கள், தங்களை குறித்த விவரங்களை, பழைய முறையில், ஏற்கனவே வழங்கி உள்ளனர். எனினும், அந்த விவரங்களில், ஏதேனும் தவறுகள் இருந்தால், உடனடியாக, இணையதளம் வழியாக, திருத்தம் செய்யலாம் என, தேர்வுத் துறை இயக்குனர் தெரிவித்தார். ஜன., 4ம் தேதி வரை, இந்த திருத்தங்களை, அந்தந்த பள்ளிகளில் உள்ள இணையதளம் வழியாகச் செய்ய வேண்டும் என, அவர் அறிவுறுத்தி உள்ளார்.








