எம்.ஏ., எம்.எஸ்சி. படிப்புகளுக்கும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு:
எம்.ஏ., எம்.எஸ்சி. உள்ளிட்ட கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர்
சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையை வரும் கல்வியாண்டில்
(2013-14)அறிமுகப்படுத்த தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் மாநில அரசுக்குப்
பரிந்துரைத்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில், அனைத்துப்
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இந்தப் பரிந்துரைக்கு ஒப்புதலை
வழங்கியுள்ளனர்.
முதல்கட்டமாக, பட்ட மேற்படிப்புகளுக்கு (எம்.ஏ., எம்.எஸ்சி.) ஒற்றைச்
சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். படிப்படியாக இந்த கலந்தாய்வு முறை
பட்டப்படிப்புகளுக்கும் (பி.ஏ., பி.எஸ்சி.) விரிவாக்கப்படும் என்று
தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன்
கூறினார்.
இந்தப் பரிந்துரையின்படி, சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட 11
பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பல்கலைக்கழக அளவிலும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு
நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பொறியியல் படிப்புக்கு
ஒரேயொரு பல்கலைக்கழகம் மட்டும் உள்ளதால், மாநிலம் முழுவதும் கலந்தாய்வு
நடத்தப்படுகிறது. ஆனால், கலை, அறிவியல் பிரிவில் 11 பல்கலைக்கழகங்கள்
உள்ளதால் பல்கலைக்கழக அளவில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது
என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒற்றைச் சாளர கலந்தாய்வை நடத்தும் முறைகளை இறுதிசெய்வதற்காக
துணைவேந்தர்களின் சிறப்புக் கூட்டத்தையும் உயர் கல்வி மன்றம்
கூட்டியுள்ளது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு
முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று நீண்ட நாள்களாக
கோரிக்கை இருந்து வருகிறது.
தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட மொத்தம் 11 பல்கலைக்கழகங்கள்
உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களில் 62 அரசுக் கல்லூரிகள், 132 அரசு உதவி
பெறும் கல்லூரிகள், 500-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் இணைப்புப்
பெற்றுள்ளன.
இவற்றில் சுமார் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பட்ட மேற்படிப்பு
இடங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது. முதற்கட்டமாக, தனியார் கல்லூரிகளில்
உள்ள இடஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று
தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டத் திருத்தம் வேண்டும்: தமிழ்நாட்டில் உயர் கல்வி வணிகமயமாகும்
சூழலில் இருந்த விடுபட ஒற்றைச் சாளர முறையிலான மாணவர் சேர்க்கை அவசியம்
என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கே.பாண்டியன் கூறினார். இதை
எந்தவிதச் சிக்கலும் இன்றி அமல்படுத்துவதற்கு தனியார் கல்லூரிகள்
சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையை
முழுமையாகவும், சரியாகவும் செயல்படுத்திட தமிழ்நாடு தனியார் கல்லூரி
ஒழுங்குமுறை சட்டம் 1976-ஐ திருத்த வேண்டும். இந்தச் சட்டத்தின் விதிகளில்
பிரிவு 9 (5) மாணவர் சேர்க்கை பொறுப்பை கல்லூரி முதல்வர்களுக்கு
வழங்கிவிடுகிறது.
தொழில்நுட்ப மாணவர் சேர்க்கைக்கு உள்ளது போன்று கலை, அறிவியல்
கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கும் சட்டப்பூர்வமாக குழுமம் உருவாக்க
வேண்டும். இந்தக் குழுமத்தின் மூலம் பல்கலைக்கழகங்களில் இணைவு பெற்ற கலை,
அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் வகையில் இந்த சட்டத்தின்
பிரிவைத் திருத்த வேண்டும். கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்
சேர்க்கைக்கு பாட வாரியாக கலந்தாய்வு நடத்த வேண்டும்.
சுயநிதி கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் அரசு விதிமுறைகளின்படி
நிரப்பப்பட வேண்டும் என்று அரசாணை 245-ல் கூறப்பட்டுள்ளது. அதேபோல்,
குறைந்தபட்சம் 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கொண்டு வரப்பட
வேண்டும்.
ஒரு விண்ணப்பத்தை மட்டுமே மாணவர்கள் சேர்க்கைக்கு அனுப்ப வேண்டும். ஒரு
பல்கலைக்கழக எல்லையில் உள்ள மாணவர், மற்ற பல்கலைக்கழகங்களின்
எல்லைக்குள்பட்ட கல்லூரிகளில் சேர விரும்பினால், அதற்கான பகுதியும்
விண்ணப்பத்திலேயே இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்
வலியுறுத்தினார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...