உயர் கல்வியின் தரம் உயர தேர்வு முறையில் மாற்றம் தேவை:
உயர் கல்வியின் தரத்தை உயர்த்த, நடைமுறையில் உள்ள
தேர்வு முறையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என பிரதமரின் பொருளாதார
ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் கூறினார்.
உயர் கல்வியின் தரமும், பொருளாதார வளர்ச்சியும் என்ற தலைப்பிலான தேசிய
மாநாடு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில்
வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டைத் தொடங்கி வைத்து சி. ரங்கராஜன்
பேசியது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உயர் கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
இந்த இளைஞர்களின் ஆற்றலை நாடு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள,
அவர்களுக்கு உயர் கல்வி தர வேண்டியது அவசியம். அதிலும் தரமான உயர் கல்வி
அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்தியாவில் இப்போதுள்ள உயர் கல்வி முறை மிகவும் கவலை அளிக்கக்
கூடிய வகையில் உள்ளது. தரம் கேள்விக்குறியாகி இருப்பதோடு, போதிய
உள்கட்டமைப்பு வசதிகளும், கல்வி நிர்வாக முறையும் போதிய அளவில் இல்லை.
எனவே, உயர் கல்வியின் தரத்தை உயர்த்த பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு
வரும் பாரம்பரிய பாடத் திட்ட முறை, பாடம் மற்றும் தேர்வு நடைமுறைகளுக்கு
முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
சில ஆண்டுக்கு முன்பு ஆந்திரம் மற்றும் சில மாநிலங்களில் உள்ள
பல்கலைக்கழகங்களுக்கு சென்றபோது, 40 ஆண்டுகளுக்கு முந்தைய கேள்வித் தாள்
நடைமுறையையே அவை பின்பற்றி வருவது தெரியவந்தது.
அதாவது, வினாத் தாளில் 10 கேள்விகள் கொடுத்து, அதில் ஏதாவது 5
கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் என விருப்பம்போல் தேர்வு செய்யும் நடைமுறை
இருந்தது.
மாணவர்கள் உண்மையான திறனை வெளிப்படுத்த இந்த பழைய நடைமுறை உதவாது.
வெளிநாடுகளில் மாணவரிடமிருந்து மிகச் சரியான விடையை மட்டும் பெறும்
வகையில், தேர்வுக்கான கேள்விகளை தெரிவு செய்வதற்கு ஆசிரியர்கள் அதிக நேரம்
எடுத்துக் கொள்கின்றனர். இந்த நடைமுறை மூலம், விடைத்தாளை திருத்தும் பணி
எளிதாகவும், வேகமாகவும் முடிந்துவிடும்.
மேலும், மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து எழுதுவதைத் தடுக்கும்
வகையில் கொள்குறி வினா முறையை குறைத்து, பதிலை சிந்தித்து எழுதும்
(அனலிடிகல்) வினாக்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் அறிவுப் பெருக்கத்துக்கு ஏற்ற
வகையில், பாடங்களையும், பாடத் திட்டங்களையும் தொடர்ந்து மாற்றியமைக்க
வேண்டும்.
ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றலிலும், ஆராய்ச்சியிலும் ஈடுபடுவதோடு,
பாடங்களை மாணவர்கள் ஆர்வமுடன் கேட்க வைக்கும் கலையை மேம்படுத்திக் கொள்ள
வேண்டும். தென் மாநிலங்களில் உள்ள சுயநிதி கல்லூரிகளின் தரத்தை ஆராய்ந்து
உறுதி செய்யும் நடைமுறைகளை மேலும் மேம்படுத்துவது, தொலைநிலைக் கல்வியில்
மாணவர்-ஆசிரியர் நேரடி கலந்துரையாடல் முறையை அறிமுகம் செய்வது உள்ளிட்ட
நடைமுறைகள் மூலமே உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என்றார்
ரங்கராஜன்.
"அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கும்'
சென்னை, ஏப். 12: அன்னிய நேரடி முதலீடு கடந்த நிதியாண்டைக் காட்டிலும்
நடப்பு 2013-14 நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என பிரதமரின் பொருளாதார
ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் கூறினார்.
சென்னை டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் சி. ரங்கராஜன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 2011-12, 2012-13
நிதியாண்டுகளில் குறைந்தே காணப்பட்டது. இருந்தபோதும் நடப்பு (2013-14)
நிதியாண்டில் சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய புள்ளிவிவர அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, நாட்டின் பொருளாதார
வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டில் 5 சதவீதமாக இருந்தது என்றும், நடப்பு
2013-14 நிதியாண்டில் இது 6.5 சதவீதமாக உயரும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசும், முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும்
சூழ்நிலைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
குறிப்பாக முதலீடுகளுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒன்றை அமைத்து, தீவிர
முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.அதிகரித்துள்ள நடப்புக் கணக்கு
பற்றாக்குறையை ஈடுசெய்ய வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க செய்யவேண்டியது
அவசியம். இதைக் கருத்தில் கொண்டுதான், அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு
அனுமதித்தது.இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.
இந்த வளர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. எனவே, அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டை காட்டிலும்,
2013-14 நிதியாண்டில் அதிகமாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...