சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ் வழியில் எழுதுவதிலுள்ள நிறை-குறைகள்:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ் வழியில் எழுதினால் அதில் உள்ள நிறை
குறைகள் என்ன? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
"தாய்மொழியில் கருத்தை வெளிப்படுத்த முடியும்":
இந்தியாவில் மிகக் கடினமான தேர்வுகளில்
ஒன்றாகக் கருதப்படும் சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் அண்மையில்
வெளியாகின. இதில், இந்திய அளவில் 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் தமிழகத்திலிருந்து வெற்றி பெற்றவர்கள் 97 பேர். அதில் தமிழ்
வழியில் எழுதி இரண்டு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவில் சர்வீஸ்
தேர்வு எழுதுபவர்களுக்கு ஆங்கிலம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்
என்றபோதிலும், தேர்வை தாய்மொழியில் எழுதும்போது மிக எளிதாக இருப்பதாக
கூறுகின்றனர் இந்த சாதனையாளர்கள்.
"போதிய புத்தகங்கள் கிடையாது":
தாய்மொழியில் எழுதும்போது, தாங்கள்
நினைக்கும் கருத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியும் போன்ற நன்மைகள்
இருந்தாலும், வேறு சில சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன என்கிறார்கள்
தமிழ் வழியில் தேர்வை எழுதியவர்கள். சிவில் சர்வீஸ் தேர்விற்கு தேவையான
புத்தகங்கள் தமிழில் கிடைப்பது கடினம் என்பதும் அதில் ஒன்று என்கிறார்
தமிழ் வழியில் எழுதி வெற்றிபெற்ற மற்றொருவர்.
"தடைகள் களையப்பட வேண்டியது அவசியம்":
தேர்வு எழுதுபவர்களின் சொந்தக் கருத்தை
வெளிப்படுத்தும் வகையில் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கேள்விகள்
கேட்கப்படுகின்றன. அதுபோன்ற சூழ்நிலையில் தாய்மொழியில் கருத்துகளை
வெளிப்படுத்துவது வெற்றிக்கு உதவுவதாக கூறுகின்றனர் தமிழ்வழியில்
தேர்வெழுதியவர்கள். அதே நேரத்தில், தாய்மொழியில் தேர்வு எழுதுவதற்கு
தடைக்கற்களாக உள்ள அம்சங்களை மத்திய, மாநில அரசுகள் களைய முயற்சி
மேற்கொண்டால் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற முடியும் என்பது
பலரின் எண்ணமாக உள்ளது.