பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் பதிவு:
வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின்
விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு
செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வுத் துறை இயக்குனராக, தேவராஜன் பதவி ஏற்றதில் இருந்து, பல்வேறு
சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத்
தேர்வுக்குப் பின், தேர்வு விவரங்களிலும், பெயர்களிலும் பிழைகள்
இருப்பதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மாணவர், தேர்வுத் துறைக்கு வருவதை
முற்றிலும் தடுக்கும் வகையில், தேர்வுத் துறை இயக்குனர், புதிய நடவடிக்கையை
எடுத்துள்ளார்.
மாநிலம் முழுவதும், அனைத்து வகை பள்ளிகளுக்கும், மாணவ, மாணவியர்
விவரங்கள் அடங்கிய படிவத்தை, தேர்வுத் துறை அனுப்பி உள்ளது. மாணவர் பெயர்,
தாய், தந்தை பெயர், தலைப்பு எழுத்து, பிறந்த தேதி, பள்ளி பெயர், முகவரி,
பெற்றோரின் மொபைல் எண், மாணவர் படிக்கும், "குரூப்" விவரம், பாடங்களின்
பெயர் என, 11 வகையான விவரங்கள், அந்த படிவத்தில் கேட்கப்பட்டன.
இதை பூர்த்தி செய்து, மாணவர், பெற்றோர், வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை
ஆசிரியர் என, நான்கு பேரும் கையெழுத்திட வேண்டும் என, இயக்குனர்
கூறியுள்ளார். இந்த விவரங்கள் அடிப்படையில் தான், மதிப்பெண் சான்றிதழ்
தயாரிக்கப்படும் என்றும், படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுக்குப்
பதிலாக, வேறு திருத்தம் கோரி, தேர்வுக்குப் பின் வரக்கூடாது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.