பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை தலைமையாசிரியர் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும்:
ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
ஆகியோர் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளை பொறுப்புடன் கண்காணித்து
வர வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயகுமார் தெரிவித்தார்.விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில்
கல்வித்துறையும்-சைல்டுலைன்-1098 என்ற அமைப்பும் இணைந்து பாலியல்
குற்றங்களிலிருந்து குழந்தைகளை
பாதுகாப்பதற்கான சட்டம் குறித்து தலைமை
ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை
வகித்தார். மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் விஜயராணி முன்னிலை வகித்தார்.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறியதாவது:
பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்கான
சட்டம் குறித்து தலைமையாசிரியர்களுக்கு விழிப்புணர்ச்சி நடைபெறுகிறது. இதை
அப்படியே ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்த வேண்டும். இன்றைய நாளில் ஆசிரியர் பணி தலையாய பணியாக இருப்பதால்
பள்ளிகளில் படிக்கும் மாணவிகளை பொறுப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், ஒவ்வொருவரை பற்றியும் அறிந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து
கண்காணித்தும் வரவேண்டும். இதுவரையில் மாவட்டத்தில் இதுபோன்ற பாலியல்
பிரச்னைகள் இல்லாத நிலையே இருக்கிறது. இனி வருங்காலத்திலும் இதுபோன்ற
சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தலைமையாசிரியர்களும்-ஆசிரியர்களும் கலந்து
பேசி முடிவு செய்ய வேண்டும். தனது வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்தில்
உள்ளவர்கள் மூலம் மாணவிகளுக்கு பிரச்னை இருக்குமானால் மனம் விட்டு பேசுவதன்
மூலம் தெரிய வரும். இச்செயலால் பாதிக்கப்பட்டவர்களை சகோதரத் தன்மையுடன்
பழகி பிரச்னையில் விடுபடுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதே, நேரத்தில்
படிப்பில் கவனம் செலுத்தவும் உதவி செய்ய வேண்டும் என முதன்மைக் கல்வி
அலுவலர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரமோகன்
பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள் குறித்து
விரிவாக பேசினார். அதையடுத்து, திட்ட இயக்குநர் பேராசிரியர் ஜான்தேவாரம்,
திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்கின், வட்டார ஒருங்கிணைப்பாளர் லதா ஆகியோர்
குழந்தைகளை தொடு உணர்ச்சிகளின் வேறுபாடு, அதனால் பாதிக்கப்படும் குழந்தைகள்
குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் கலந்து கொண்டனர். இதற்கான
ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்(மேல்நிலை),
மாவட்ட சுற்றுச் சூழல் கல்வி அலுவலர் ஜோதிராமலிங்கம் மற்றும் சைல்டு
லைன்-1098 என்ற அமைப்பும் செய்திருந்தனர்.








