கோவையில் தமிழ் பயிற்றுமொழி மாநாடு: தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு:
பேரூரில், தமிழ் பயிற்றுமொழி -வழிபாட்டு மொழி மாநில மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.மாநாட்டின் இரண்டாம் நாளான 8ம் தேதி, முத்தமிழ் அரங்க வளாகத்தில், காலை 9.00 மணிக்கு, பாரதி கிருஷ்ணகுமார் தலைமையில், "ஊடகங்களில் தமிழ்" என்ற தலைப்பிலும், முற்பகல் 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ராமசுப்ரமணியம் தலைமையில், "நீதித்துறையில் தமிழ்" எனும் தலைப்பிலும் கருத்தரங்கம் நடக்கிறது.
இதேபோல், பேரூராதீன வளாகத்திலுள்ள தொல்காப்பியர்
அரங்கத்தில், 8ம் தேதி காலை 9.00 மணிக்கு, பாரதிதாசன் பல்கலை முன்னாள்
துணைவேந்தர் பொன்னவைக்கோ தலைமையில், "அருளியல் வழிபாட்டு நிகழ்வுகளில்
தமிழ்" எனும் தலைப்பிலும், தொடர்ந்து காலை 11.15 மணிக்கு அரங்கசாமி
தலைமையில் "வாழ்வியல் வழிபாட்டு நிகழ்வுகளில் தமிழ்" எனும் தலைப்பிலும்
கருத்தரங்கம் நடக்கிறது.
மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான
தமிழ் அறிஞர்களும், புலவர்களும், ஆன்மிக சான்றோர்களும் பங்கேற்கின்றனர்.
இறுதியாக, 8ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு, காந்திபுரம் வி.கே.கே.மேனன்
ரோட்டில், மாநாட்டு நிறைவுப் பேரணியை மேயர் வேலுசாமி துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு, கோவை சிவானந்தா காலனியில்,
வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் தலைமையில் மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது.
இதில், மாநாட்டு மலரை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்
வெளியிட, வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பெற்றுக்கொள்கிறார். இறுதியில்,
பாரதியார் பல்கலை தமிழ்த்துறை முன்னாள் தலைவர் சிற்பி பாலசுப்ரமணியம்
மாநாட்டு தீர்மான தொகுப்புரையை வாசிக்கிறார்.







