அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லை: கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படித்தவர்கள் புகார்:
நெல்லை பல்கலை.,யில் எம்.ஏ., கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படித்த மாணவர்கள் பலர் அரசு வேலைவாய்ப்பை இழந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் ஆங்கிலத்துறை சார்பில் எம்ஏ., கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் என்ற இரண்டாண்டு படிப்பு பயிற்றுவிக்கப்படுகிது. இந்த பாடத்தில் ஆண்டுதோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர்.
எம்.ஏ., கம்யூனிகேட்டிவ் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி
பெற்ற பலர் சான்றிதழ் சரிபார்ப்பின் போது நிராகரிக்கப்படுகின்றனர்.
எம்.ஏ., கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் எம்.ஏ., ஆங்கில
இலக்கியத்திற்கு இணையான படிப்பு இல்லை என்ற காரணத்தை கூறி
நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்படவர்கள் கூறுகையில், "நெல்லை
பல்கலை.,யில் எம்ஏ., கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ் படித்த நாங்கள் ஆசிரியர்
தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றோம். தொடர்ந்து நடந்த
சான்றிதழ் சரிபார்ப்பின் போது எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எம்.ஏ., ஆங்கில இலக்கியம்தான் ஆசிரியர் பணிக்கு சரியான
கல்வித்தகுதி. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது
என தெரிவித்து விட்டது. இருப்பினும் நெல்லை பல்கலை., நிர்வாகத்திடம் இரண்டு
படிப்புகளும் இணையான படிப்புதான் என கடிதம் வாங்கி சென்றோம்.
இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த படிப்பு படித்த சிலருக்கு அரசு பணி கிடைக்கிறது. தகுதி இருந்தும்
சிலர் அரசு பணி வாய்ப்பை இழக்கிறோம்" என்றனர்.
இந்த பிரச்னை குறித்து நெல்லை பல்கலை., பதிவாளர்
தமிழ்செல்வனிடம் கேட்டபோது, "நெல்லை பல்கலை.,யில் நடத்தப்படும் எம்.ஏ.,
கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படிப்பும் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பும்
சமமானதுதான்.
இந்த இரண்டு படிப்புகளுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக
மாணவர்கள் தெரிவித்த புகாரை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகத்திற்கு
கடிதம் எழுதியுள்ளோம். அதில் எம்.ஏ., கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படிப்பு
எம்.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு இணையான படிப்பு என குறிப்பிட்டுள்ளோம்.
தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளிடமும் நினைவூட்டி
வருகிறோம். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என நம்புகிறோம். அரசாணை
வெளியானதும் மாணவர்களின் பிரச்னை தீர்ந்து விடும்" என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...