திறனாய்வு தேர்வில் பங்கேற்க மாணவர்களிடையே ஆர்வம் குறைவு:
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள10ம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு தேர்வு எழுத தேனி மாவட்டத்தில் மாணவர்களிடையே போதிய ஆர்வம் இல்லை.மாவட்டம் முழுவதும் 1,697 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்களின் தனித்தன்மையை மேம்படுத்தவும், படிப்பறிவு மட்டுமின்றி, பொதுத் திறனை வளர்கவும் மத்திய அரசு தேசிய திறனாய்வு தேர்வை நடத்தி வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கள்ளர், நகராட்சி பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு, இத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவ மாணவிகளை அந்தந்த பள்ளி நிர்வாகமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
விண்ணப்பிக்கும் தேதி கடந்த மாதம் 24 ந்தேதியுடன் முடிவடைந்ததால், ஆன்-லைனில் பெறப்பட்ட விண்ணப்பங்களை தற்போது சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இம்மாதம் 17ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்வுக்கு, ஒவ்வொரு கல்வி மாவட்ட வாரியாக இத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் கணினியில் ஏற்றப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் இத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது. மாணவர்களிடையை இந்த தேர்வை எழுத ஆர்வம் மிகவும் குறைந்துள்ளதை காட்டுகிறது. உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 196 மாணவர்களும், 474 மாணவிகளும் என 670 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் மாணவ மாணவிகள் சேர்த்து 1027 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் உள்ள 10ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையில் 7.17 சதவீதம் மட்டுமே. இதிலும் மாணவிகளைவிட மாணவர்களின் எண்ணிக்கை பாதியளவே உள்ளது.







