உலக செஸ் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு:
சென்னையில் துவங்கிய உலக அளவிலான செஸ் போட்டியில், ஈரோடு மாவட்டத்தின் சார்பில் 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.தமிழக அரசு பள்ளி மாணவர்களின் திறமையும், ஆற்றலையும் வலுப்படுத்தவும், சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும், ஏழு முதல் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
பள்ளிகளில் செஸ் விளையாட்டு மேம்பாட்டுக்காக, 39.47 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியது.பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, குறுமைய அளவிலும், குறுமைய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, யூனியன் அளவிலும், யூனியன் அளவில் வெற்றி பெற்றவர்கள், கல்வி மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் வருவாய், மண்டல அளவில் வெற்றி பெற்று, உலக செஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுவர். ஈரோடு மண்டலத்தில் மட்டும், 24 மாணவ, மாணவிகள் உலக செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
சென்னையில் நடக்கும் செஸ் போட்டியில், 24 மாணவர்களும் பங்கேற்று விளையாடியதாக, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சித்தையா தெரிவித்தார்.