அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டி.என்.பி.எல்.,லில் கல்விச் சுற்றுலா:
டி.என்.பி.எல்., நிறுவனத்தினருக்கும், அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு நல்லுறவை வளர்க்கும் விதமாக, நிறுவனத்தைச் சுற்றி அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ப்ளஸ் 1 பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு, காகித ஆலையைச் சுற்றிப்பார்க்க "கல்விச் சுற்றுலா" என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் காலை, 10.30 மணி முதல், மதியம் 2.30 மணி வரை, காகித ஆலையை சுற்றுபார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரிடம் காகிதம் தயாரிப்பது பற்றிய விளக்கமும், காகித நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) பட்டாபிராமன் கூறினார்.
அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் மேலாண்மைத் துறையைச் சார்ந்த பேராசிரியர் ஞானஜோதி திறன் மேம்பாட்டு வகுப்பு நடத்தினார். இந்த ஆண்டில் புகளூர், நொய்யல், புன்னம், வாங்கல் பகுதியில் அமைந்துள்ள, ஆறு அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வாரந்தோறும் இச்சுற்றுலாவிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் வந்து செல்ல ஏதுவாக பேருந்து வசதி மற்றும் ஆலை வளாகத்தில் தேநீர் வசதி மற்றும் மதிய உணவும் வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சுற்றுலாவின் இறுதியில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் நினைவுப் பரிசாக வழங்கப்படுகிறது.