பள்ளிக்கு செல்ல பயந்த 240 மாணவர்கள்: பாடம் நடத்தும் பெற்றோர்:
திருநெல்வேலி கோபாலசமுத்திரத்தில், உள்ள அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில், சமீபத்தில் ஒரு சமுதாய தலைவரின் பிறந்த தினத்தன்று, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தலித் சமுதாய மாணவ, மாணவிகள், இனிப்பை வாங்க மறுத்து விட்டனர்.
இதனால், ஆத்திரமுற்ற மற்றொரு சமுதாயத்தினர் ஒரு மாணவியை தாக்கினர்.
இதுதொடர்பாக, இரு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. மாணவி
தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் கூறச்சென்ற தர்மராஜ், 21, என்பவர்
தீபாவளியன்று ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதன் பின்பு
தலித் மாணவ, மாணவிகள் பயந்து போய் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டனர்.
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி பள்ளி
ஏற்படுத்தவேண்டும், என கோரிக்கை வைத்தனர். அதை, அரசு அதிகாரிகள் ஏற்பதாக
கூறினாலும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எனவே, மாணவர்களின் கல்வி பாதிக்கக்
கூடாது என்பதற்காக, தலித் சமூகத்தினரின் சமுதாயக் கூடத்தில் ஒரு
பள்ளிக்கூடம் துவக்கப்படுகிறது.
அந்த கிராமத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் 60
பேரும், 6 முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் 180 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.
அவர்களுக்கு அந்த ஊரைச் சேர்ந்த படித்த பெற்றோர்களும், தன்னார்வ தொண்டு
நிறுவனத்தினரும், ஆசிரியர்களாக மாறி பாடம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோபால சமுத்திரத்தில் நேற்று நடந்தது.
மக்கள் உரிமை களத்தின் ஒருங்கிணைப்பாளர் பரதன், அனைத்து ஆசிரியர் அமைப்பின்
பிரமுகர் செல்வகுமார், எஸ்.சி.எஸ்.டி., ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர்
பாலசுந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளை (நவ.,11) முதல், கோபால சமுத்திரத்தில் புதிய பள்ளி துவங்குவது
என்றும், வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை, பொதுமக்களிடம்
வசூலித்து வழங்குவது எனவும் முடிவு செய்துள்ளனர்.