தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும்:
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகி
உள்ளன. முதல் தாள் தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12
ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து
311 பேர் எழுதினர். இதில் 14,496 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு
தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில் 27 ஆயிரத்து 92 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை
பள்ளிகளில் பணியாற்ற தேவைப்படும் ஆசிரியர்கள் 15,000 மட்டுமே. ஆனால் 27
ஆயிரம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற
பட்டதாரிகளுக்கும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி வேலை வாய்ப்பு அலுவலக
சீனியாரிட்டி அடிப்படையிலும் வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
எனவே, தகுதித் தேர்வில் தேர்வு
செய்யப்பட்டவர்களில் தற்போது 15 ஆயிரம் பேர் மட்டும்தான் ஆசிரியர் பணிக்கு
எடுத்து கொள்ளப்படுகிறார்கள். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி 2
வாரத்தில் தொடங்கும் என்று தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னையில்
நடைபெறும் என்று தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களின்
பட்டியல் தொடக்க கல்வி துறைக்கு அனுப்பப்படும். அத்துறை காலியாக உள்ள
இடங்களுக்கு ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கான பணி ஆணையை வழங்குவார்கள்.