இந்திய, ஆஸ்திரேலிய கூட்டு பிஎச்.டி., உதவித்தொகை திட்டம்:
ஐ.ஐ.டி., கான்பூர், ஐ.ஐ.டி., சென்னை மற்றும் ஐ.ஐ.எஸ்சி., பெங்களூர் ஆகியவை, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலையுடன் இணைந்து, 2014ம் ஆண்டு முதல் புதிய கூட்டு பிஎச்.டி., உதவித்தொகை திட்டத்தை வழங்கவுள்ளன.
இத்திட்டத்தின்படி, 16 பிஎச்.டி., ஆய்வாளர்களுக்கு, 3 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர்கள் வழங்கப்படுவதோடு, 3 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி பரிமாற்றங்களுக்கான ஆதரவும் நல்கப்படும்.
இத்திட்டம், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களை இணைத்து, கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட வைப்பதுடன், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பாக, உலகம் இன்று எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் குறித்தும் இந்த கூட்டு ஆராய்ச்சி கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன்மூலமாக, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையில், கல்வி, கலாச்சாரம் மற்றும் தொழில்துறையில் ஒத்துழைப்பு ஏற்படவும் இந்த புதிய திட்டம் உதவும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன.
இத்திட்டத்தின் மூலமாக, மெல்போர்ன் பல்கலையில் பிஎச்.டி., ஆய்வை மேற்கொள்ளும் மாணவர், மேற்கூறிய 3 இந்திய கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களால் மேற்பார்வை செய்யப்படுவார். அதேபோல், குறிப்பிட்ட 3 இந்திய கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி., ஆய்வை மேற்கொள்ளும் நபர்கள், மெல்போர்ன் பல்கலை ஆசிரியர்களால் மேற்பார்வை செய்யப்படுவார்கள்.