தமிழகத்தில் அதிகரிக்கும் ஜி.ஆர்.இ., தேர்வெழுதுவோர் எண்ணிக்கை!
அமெரிக்காவில் முதுநிலைப் படிப்பில் சேர்வதற்கான ஜி.ஆர்.இ., தேர்வெழுதுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.தற்போதைய நிலையில், இந்திய அளவில் பார்த்தால், GRE தேர்வெழுதுவோரில் ஆந்திரா முதலிடம் பெறுகிறது. அதற்கடுத்து இரண்டாமிடத்தில் தமிழ்நாடும், மராட்டியம் மூன்றாமிடத்திலும் வருகின்றன.
நான்காம் இடத்தை சம எண்ணிக்கை என்ற முறையில் டெல்லியும், கர்நாடகமும் பகிர்ந்து கொள்கின்றன. GRE தேர்வின் மீதான ஆர்வம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவில், GRE தேர்வெழுதுவோரில் பத்தில் ஒருவர் சென்னையை சேர்ந்தவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்க சமூகத்தினர் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கின்றன. மேலும், தமிழகத்தின் மேற்கு பகுதி மாணவர்களும் முன்னிலை வகிக்கின்றனர். விரும்பிய பணி வாய்ப்புகளைப் பெறாத பொறியியல் பட்டதாரிகள், வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை இழக்க விரும்புவதில்லை.
தமிழகத்தின் பல முக்கிய பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வெளிநாட்டு முதுநிலைப் படிப்பு குறித்து தேவையான விழிப்புணர்வும், ஆர்வமும் தரப்படுகிறது. எனவே, GRE எழுதுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன.