ரூபாய் வீழ்ச்சி - இந்திய மாணவர்களை ஈர்க்க போட்டோ போட்டி:
சமீபத்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொழில்துறையினருக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் அதுதொடர்பான கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் சென்று படிக்க நினைக்கும் இந்திய மாணவர்கள், அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது.
அதேசமயம், இத்தகைய விளைவுகளுக்காக, தங்களிடம் வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதை பல வெளிநாட்டுப் பல்கலைகள் விரும்புவதில்லை. எனவே, அவை, இந்திய மாணவர்களைக் கவரும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
குறைக்கப்பட்ட காலஅளவு
சில வெளிநாட்டுப் பல்கலைகள், தங்களுடைய படிப்பின் காலஅளவை குறைத்துள்ளன. நியூசிலாந்தின் சில பல்கலைகள், தங்களின் இரண்டு வருட முதுநிலைப் படிப்பை, வெளிநாட்டு மாணவர்கள், 12 முதல் 18 மாதங்களில் நிறைவு செய்யும் வகையில் நடைமுறைகளை மாற்றியமைத்து உள்ளன. மேலும், சில இடங்களில் வேறு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதாவது, நீளமான வேலை நாட்கள்(longer work days), இடைவெளி மற்றும் விடுமுறை அல்லாத பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், படிப்பின் காலஅளவு வெகுவாக குறையும். விரைவாக படிப்பு முடிவதனால், மாணவர்களின் வெளிநாட்டில் தங்கும் வாழ்க்கைச் செலவினங்கள் மட்டுப்படுவதுடன், தங்களின் கல்விக் கடனை திருப்தி செலுத்துவதும் விரைவில் தொடங்கும்.
கிரெடிட் கோர்ஸ் விதிவிலக்கு
ஆஸ்திரேலிய உயர்கல்வி நிறுவனங்கள், ஏற்கனவே, தொடர்புடைய வேறு படிப்பை முடித்துள்ள மாணவர்களுக்காக, credit subject exemptions -ஐ அங்கீகரித்துள்ளன. இந்த விதிவிலக்குகளால், இந்திய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் குறைகிறது.
படிப்பு மாறுதல்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பல்கலைகள் மட்டுமல்ல, அமெரிக்க பல்கலைகளும், இந்திய மாணவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. நியூயார்க்கிலுள்ள கன்கார்டியா பல்கலைக்கழகம், சென்னையிலுள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியுடன் இணைந்து, American transfer படிப்பை வழங்குகிறது.
இதன்மூலம், ஒரு இந்திய மாணவர் 4 ஆண்டுகளுக்கு பதிலாக 3.5 ஆண்டுகளில் இளநிலைப் பட்டத்தையும், மொத்தமாக 6 ஆண்டுகளுக்குப் பதில், 4.5 ஆண்டுகளில் முதுநிலைப் பட்டத்தையும் சேர்த்துப் பெறலாம். இதன்மூலம், ஒட்டுமொத்த அளவில் மாணவர்களின் செலவு பெரிதும் குறைகிறது.
உதவித்தொகை மற்றும் இதர நிதியுதவிகள்
பிரிட்டனிலுள்ள ஆங்லியா ரஸ்கின் பல்கலை போன்ற சில கல்வி நிறுவனங்கள், ரூபாய் வீழ்ச்சியின் பொருட்டு, சில புதிய உதவித்தொகைகளை அறிவித்துள்ளன. மேலும், நியூசிலாந்தின் பல்கலைகள், தங்கள் நாட்டு மாணவர்களுக்கு என்ன செலவில் பிஎச்.டி., பட்டப் படிப்பை வழங்குமோ, அதே செலவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை முன்வைத்துள்ளன.
ஜெர்மனி நாடு, ஆர்கிடெக்சர் துறையில், முதுநிலைப் படிப்பை மேற்கொள்வோர் மற்றும் அத்துறையில் நீட்டித்த படிப்பை மேற்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களுக்கென புதிய உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.
இதர உந்துதல்கள்
வெளிநாட்டுப் பல்கலைகள் மட்டுமின்றி, வெளிநாட்டுக் கல்வியுடன் தொடர்புடைய பல அமைப்புகளும், இந்திய மாணவர்களை வெளிநாட்டுக் கல்வியை மேற்கொள்ளும்படி ஊக்குவித்து வருகின்றன. Western Union Business Solutions என்ற அமைப்பு, உலகெங்கிலுமுள்ள உயர்கல்வி நிறுவனங்கள், தங்களிடம் கல்வி பயில வரும் இந்திய மாணவர்களிடமிருந்து, கல்விக் கட்டணத்தை நேரடியாக இந்திய ரூபாயாகவே பெற்றுக்கொள்ளும் வகையில், ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Weizmann Forex and Paul Merchants Limited, Western union agents in India போன்றவை, இந்தியாவின் பல இடங்களில் இந்த சேவை கிடைக்குமாறு செய்யவுள்ளன. இதன்மூலம், வீழ்ந்து கிடக்கும் ரூபாய் மதிப்பால், இந்தியர்கள் பாதிக்கப்படாமல் தவிர்க்கலாம்.
வங்கிகளின் உதவி
இந்திய வங்கிகளும் இந்த விஷயத்தில் சற்று இறங்கிவர ஆரம்பித்துள்ளன. வெளிநாட்டுக் கல்விக்காக கடன் பெற்றவர்கள், அதை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்துள்ளன. ஸ்டேட் வங்கி - ஐதராபாத், கல்விக் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை, 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது.
மேலும், HDFC Credila வங்கி, சில வகையான கல்விக் கடன்களுக்கு, காலகட்டத்தை 15 ஆண்டுகள் வரை நீட்டித்துள்ளது. வெளிநாட்டுக் கல்விக்கு மாணவர்களை அனுப்புவதில், உலகளவில் ஒரு முக்கிய நாடாக இந்தியா திகழ்வதால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியானது, வெளிநாட்டுப் பல்கலைகளின் வருமானத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், ஒரு இந்தியர், வெளிநாட்டுக் கல்விக்கான செலவினத்தில் 20% அதிகரிப்பதை விரும்ப மாட்டார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்கின்றனர். எனவே, அவர்களை இழக்க எந்தவகையிலும் விரும்பாத வெளிநாட்டுப் பல்கலைகள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் நிகழும் அபாயத்தை தடுக்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்ககொண்டுள்ளன.