26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி: நெல்லையில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்:
அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப
வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை அரசு
ஊழியர்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் புதன்கிழமை உண்ணாவிரதம்
நடைபெற்றது.
அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதிய முறையில் நிரப்ப
வேண்டும். சாலை பணியாளர்கள் பணி நீக்கம் காலமான 41 மாதத்தை
வரன்முறைப்படுத்தி அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு
ஊழியர்களுக்கு வழங்குவதுபோல், மாநில அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்
ரூ. 3,500 மற்றும் வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி, 40 சதவீத
தொகுப்பூதியம் வழங்க வேண்டும். திருமண முன்பணம் ரூ. 2 லட்சம், பண்டிகை
முன்பணம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். பதிவறை எழுத்தர்களுக்கு தர ஊதியம்
ரூ. 400 வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர்கள் மற்றும்
ஊர்புற நூலகர்களுக்கு தர ஊதியம் ரூ. 200 வழங்க வேண்டும்.
தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு வழங்கியதுபோல, முதுநிலைக்கும் ஊதிய
உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் திருநெல்வேலி மாவட்டக் கிளை சார்பில்
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு
அமைப்பின் மாவட்டத் தலைவர் இரா. ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச்
செயலர் வீ. பார்த்தசாரதி, மாவட்ட இணைச் செயலர் இரா. லோகிதாசன்,
டி.என்.பி.டி.எப் சங்க மாவட்டச் செயலர் இ. சுடலைமணி, சிஐடியூ மாவட்டத்
தலைவர் பி. மோகன், மாவட்டப் பொருளாளர் எம்.எஸ். மந்திரம் முன்னிலை
வகித்தனர்.
அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்க கோட்ட பொதுச்செயலர் செ.
முத்துக்குமாரசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். அமைப்பின் மாநிலத்
துணைத் தலைவர் கோ. சுகுமார், சமூகநலத்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர்
பத்மனாபன், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகி ஜொஹராபாத்திமா, சத்துணவு
ஊழியர் சங்க மாநிலச் செயலர் சங்கரவடிவு,
மருத்துவத்துறை பணியாளர் சங்க நிர்வாகி நந்தகோபால், மோட்டார் வாகன
பராமரிப்புத்துறை சங்க மாவட்டச் செயலர் முருகன், அரசு ஊழியர் சங்க துணைத்
தலைவர் ச.ஈனமுத்து, சாலைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலர் பழனி,
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தி.க. ராமசாமி உள்பட 200
க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.