இந்தியாவில் தலைசிறந்த மாணவர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
வைர விழா கொண்டாட்டம்
மும்பை கிசின்சந்த் செல்லராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வைரவிழா
நேற்று கொண்டாட்டப்பட்டது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் இந்த
விழாவில் மராட்டிய கவர்னர் சங்கரநாராயணன், முதல்–மந்திரி பிரிதிவிராஜ்
சவான், நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் தொழில் அதிபர் அனில் அம்பானி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
பேசியதாவது:–
தக்க வைத்து கொள்ள வேண்டும்
உலக அளவில் புகழ்பெற்ற 200 பல்கலைக்கழகங்கள் உலக நாடுகளில் இருக்கின்றன.
ஆனால் அவற்றில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. ஆகையால், சிறந்த
மாணவர்களையும், ஆசிரியர்களையும் நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
இந்தியாவை பொறுத்தவரை திறமையில் குறைவானவர்கள் என்று யாருமே கிடையாது.
நோபல் பரிசு பெற்ற இந்தியர்களான அமர்த்தியா சென், ஹரிகோவிந்த் கவுர்னா,
சந்திரசேகர் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் இந்திய பல்கலைக்கழகத்தில் கல்வி
பயின்றவர்கள். ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில்
பணியாற்றியபோது அவர்களின் சாதனையை பார்த்து அந்தந்த நாட்டில் வைத்து நோபல்
பரிசு வழங்கப்பட்டது.
சேர்க்கை விகிதம் குறைவு
இந்தியாவில் 650–க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 33
ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. 11–வது திட்டகாலத்தில்
ஒவ்வொரு 1,000 சதுர கி.மீ. தூரத்துக்கும் இருந்த பல்கலைக்கழகங்களின்
எண்ணிக்கை 10–ல் இருந்து 14 ஆக உயர்ந்தது. இந்திய கல்வி முறை உலக தர
வரிசையில் 2–வது இடத்தில் இருக்கிறது. இருந்தாலும் 18 வயது முதல் 24 வயது
வரை உள்ள நபர்களின் சேர்க்கை விகிதம் 7 சதவீதத்தை கூட தாண்டவில்லை. ஆனால்
இதே விகிதம் ஜெர்மனியில் 21 சதவீதமாகவும், ஐக்கிய நாடுகளில் 34
சதவீதமாகவும் உள்ளது.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
இதை தொடர்ந்து அவர் இன்று நாக்பூரில் தொடங்கும் ‘கிரிஷி வசந்த்’ என்ற
விவசாய கண்காட்சியை திறந்து வைக்கிறார். 5 நாட்கள் நடைபெறும் இந்த
பொருட்காட்சி மறைந்த முன்னாள் முதல்–மந்திரி வசந்த்ராவ் நாயக்கின்
பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.







