சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக ஏழை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: இலவச கல்வித்
திட்டத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று
மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும்
மற்றும் சுயநிதி கல்லூரிகள்) மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்த 3 மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற
மாணவர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், முதல் தலைமுறை
மாணவர்கள், கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் குழந்தைகள்
இந்தத் திட்டத்தின் கீழ் இலவச பட்டப் படிப்பை பெற முடியும்.
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு
அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in
என்ற இணையதளத்தில் காணலாம்.
விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன், பிளஸ்-2 தேர்வு முடிவு
வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர்
அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.