இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டு விண்ணப்பம் வழங்காமல், தனியார்
பள்ளிகள், முரண்டு பிடித்து வருகின்றன. இந்த ஒதுக்கீட்டின் கீழ், 60 ஆயிரம்
இடங்கள் உள்ள நிலையில், இதுவரை, 8,000 விண்ணப்பங்கள் மட்டுமே
வழங்கப்பட்டுள்ளன.ஒதுக்கீடு :
ஆர்.டி.இ., சட்டத்தின்படி, அரசு உதவி பெறாத தனியார் சுயநிதி பள்ளிகள், தங்களிடம் உள்ள, சேர்க்கை வகுப்பு இடஙகளில்
(எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு), 25 சதவீதத்தை, ஏழை எளிய,
சமுதாயத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, ஒதுக்கீடு செய்ய
வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் சேரும் குழந்தைகளின் கல்விச்செலவை, எட்டாம்
வகுப்பு வரை, மத்திய அரசு ஏற்கிறது. "கடந்த, இரு ஆண்டுகளில், ஆர்.டி.இ.,
ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் கல்விச்செலவை, அரசு வழங்காததால்,
நடப்பு கல்வி ஆண்டில், ஆர்.டி.இ., இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம்' என,
தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்தது.இதன்பின்,
மெட்ரிக் பள்ளி கள் இயக்குனர், பிச்சை, சங்க நிர்வாகிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தி, "மூன்று மாதங்களுக்குள், நிலுவைத் தொகையை வழங்க,
நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து,
விண்ணப்பம் வழங்குவதாக, பள்ளிகள் அறிவித்தன. ஆனால், இடஒதுக்கீட்டு
விண்ணப்பம் வழங்குவதில், தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டவில்லை என்பது,
வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
விண்ணப்பங்கள் : ஆர்.டி.இ., இடஒதுக்கீட்டின்படி, நர்சரி பள்ளிகள், ஆரம்ப
பள்ளிகள், பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றில், 60 ஆயிரம் இடங்கள் உள்ளன.
கடந்த ஆண்டில், மெட்ரிக் பள்ளிகளில், 22 ஆயிரம் இடங்கள், நர்சரி பள்ளிகள்
தரப்பில், 22 ஆயிரம் இடங்கள், பள்ளி கல்வித்துறை மூலம், 2,000 இடங்கள் என,
46 ஆயிரம் இடங்கள் நிரம்பியதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
விண்ணப்பம் வழங்க, வரும், 18ம் தேதி கடைசி நாள் என்னும் நிலையில், இதுவரை,
மாநிலம் முழுவதும், 8,000 விண்ணப்பங்கள் மட்டுமே வினியோகிக்கப்பட்டுள்ளன.
அதிர்ச்சி : அதிகபட்சமாக, கோவை மாவட்டத்தில், 1,000 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில், 75 விண்ணப்பங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில்,
100, 50 என, குறைவாக வழங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளின், இந்த
கண்ணாமூச்சி விளையாட்டால், தமிழக அரசு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
தனியார் பள்ளிகள் ஒத்துழைப்பு தராவிட்டால், கடந்த ஆண்டைவிட, குறைவான
இடங்கள் நிரம்பும் நிலை உருவாகும்.
கடும் நடவடிக்கை : இதனால், அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளும், 25 சதவீத
இடங்களை நிரப்புவதை உறுதி செய்யும் வகையில், விண்ணப்பம் வழங்க வேண்டும்
எனவும், அலட்சியம் செய்யும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம், எச்சரிக்கை விடுத்துள்ளது.