குற்றங்களுக்கு தண்டனைகள் எளிமையாக்கப்படுவதால் சிறுவர்களை பகடைக்காயாக
பயன்படுத்தி சில சமூக விரோதிகள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது
அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப
முறையில் வாக்குமூலம் சேகரிக்க போலீசாரின் உதவியை நாட திட்டமிட்டுள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருட்டு, கொலை
முயற்சி, கொள்ளை என பல்வேறு குற்றச்செயல்களுக்காக போலீசாரால் கைது
செய்யப்படும் சிறார்கள், சிறார் நீதிமன்றத்தின் முன்
ஒப்படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கவும்,
குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபடாமல் இருக்கவும், பெற்றோர் அல்லது
பாதுகாவலர் பெயிலில் எடுக்கும் வரை, கூர்நோக்கு இல்லத்தில் தங்க
வைக்கப்படுகின்றனர்.
கோவை மாவட்ட சிறை மீண்டோர் நல்வாழ்வு சங்கம் சார்பில்
அரசின் உதவியோடு லட்சுமி மில் பகுதியில் கூர்நோக்கு மையம் செயல்படுகிறது.
இங்கு, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலுள்ள
400 காவல் நிலையங்களில் குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்படும் சிறார்கள்
தங்க வைக்கப்படுகின்றனர்.
இதில், கடந்த 2011 ல் கைது செய்யப்பட்ட 159 சிறார்களில் 154
பேரும், கடந்த 2012 ல், 161 சிறார்களில் 151 பேரும், கடந்த 2013 ல் 172
சிறார்களில் 122 நபர்களும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது ஆய்வில்
தெரியவந்துள்ளது. இப்படி, கோவை மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான
சிறார்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது.
இதற்கு, சுய தேவைகளுக்காக, சிறார்களை குற்றவாளிகளாக இயக்கி,
ஆதாயம் தேடும் கும்பல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக,
மாவட்டந்தோறும் கைது செய்யப்படும் சிறார்களின் பின்னணி, குடும்ப சூழல்,
குற்றச்சம்பவத்திற்கான காரணம் ஆகியவற்றை பல கட்ட விசாரணை செய்து ஆராய
முடிவு செய்யப்பட்டது.
தவிர, தொடர்ந்து குற்றச்செயலுக்காக சிக்கும் சிறுவர்கள்
விடுதலையாகி சென்றவுடன், அவர்கள் மீது தனி கவனம் செலுத்த போலீசாரின் உதவியை
நாட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சிறார் பாதுகாப்பு குழு அதிகாரிகள் கூறுகையில், "இளம்
வயதில் தவறு செய்யும் சிறுவர்களை கடுமையாக தண்டிக்காமல், குற்றச்செயலில்
இருந்து விடுவிக்கவும், தண்டனையை எளிமையாக்கவும் பல்வேறு சட்டவிதிகள்
உள்ளன. இதை தவறாக பயன்படுத்தும் சமூக விரோத கும்பல், சிறுவர்களை
குற்றச்செயலில் ஈடுபடுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இது, கோவை
மாவட்டத்தில் அதிகளவில் அரங்கேறி வருகிறது.
இதை கட்டுப்படுத்த சிறுவர்களிடம் இருந்து பெறும்
வாக்குமூலத்தை, தொழில்நுட்ப முறையில் அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட போலீசாருடன் கைக்கோர்க்க முடிவு
செய்யப்பட்டுள்ளது" என்றனர்.







