இவற்றை எதிர்கொள்ள, அரசிடம் என்ன திட்டம் உள்ளது? மக்களிடம் என்ன விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது?ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு, குப்பை சேகரிப்பில் இருந்து கழிவுநீர் விடுவதுவரை கவனமாக செய்தால்,சென்னையின் ஏரிகளை மீட்டெடுக்கலாம். இனி, ஏரிகளின் இன்றைய நிலை...போரூர் ஏரி மொத்தம் 800 ஏக்கரில் நீர்நிலையாக இருந்த போரூர் ஏரிக்கு, தற்போது 330ஏக்கருக்கு மட்டுமே, வருவாய் துறையிடம் சான்றுகள் உள்ளன.
ஆனால், அதைவிட கொடுமை, தற்போதைய ஏரியின் பரப்பளவு 100 ஏக்கருக்கும் குறைவாகத் தான் இருக்கிறது.
போரூர் ஏரியின் குறுக்கே, வடக்கு தெற்காக, தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலை செல்கிறது. இந்த சாலையின் கிழக்கு பகுதியை மட்டுமே, சென்னை குடிநீர் வாரியம்
பராமரிப்பதாக கூறப்படுகிறது.
அம்பேத்கர் நகர், சமத்துவ நகர், பெரியார் நகர், அண்ணா நகர், கொளுத்து
வாஞ்சேரி ஆகிய பகுதிகள் பொதுமக்களின் ஆக்கிரமிப்பில் இருந்தன.
பின், கடந்த ஆண்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால், அகற்றப்பட்டன. ஆயினும், பல்வேறு பகுதிகள், இன்னும் ஆக்கிரமிப்பிலேயே உள்ளன.
ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீர், ஏரியில் சேர்கிறது.
பல்லாவரம் பெரிய ஏரி
பல்லாவரம் நகராட்சியில் உள்ள, பல்லாவரம் பெரிய ஏரி, 513 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையாக இருந்தது.
பல்வேறு ஆக்கிரமிப்புகளில் சிக்கி, தற்போது, 100 ஏக்கருக்கும் குறைவாகவே உள்ளது. பொதுப்பணி துறையின் நிர்வாகத்தில் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில், தினசரி சேகரிக்கப்படும், 100 டன் குப்பை, அந்த ஏரியில்தான் கொட்டப்படுகிறது. இந்த பகுதிக்கு சென்றாலே, வெப்பமும், துர்நாற்றமும் ஆட்களை துரத்துகின்றன.
அந்த ஏரியின் குறுக்காக, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை போடப்பட்ட பின், குப்பை கொட்டுவோருக்கு மேலும் வசதியாகி விட்டது. ஏரியில், அவ்வப்போது, குப்பை எரிக்கப்படுவதால், பகுதிவாசிகளுக்கு, பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. நிலத்தடி நீர் மிகவும் மாசடைந்துள்ளது. ஏரியில் குப்பை கொட்டுவது குறித்து, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
பீர்க்கன்காரணை ஏரி
தாம்பரம், பெருங்களத்தூருக்கு இடைப்பட்ட, என்.எச்., 45 நெடுஞ்சாலையின் இடதுபுறம், 45 ஏக்கர் பரப்பளவில் இருந்த பீர்க்கன்காரணை ஏரி, தற்போது 10 ஏக்கராக சுருங்கிவிட்டது.
பொதுப்பணி துறையின் நிர்வாகத்தில் உள்ள ஏரியின் கரையோரம், ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுவைத்துள்ள இடங்களில், புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.
ஏரி முழுக்க, குப்பை, குப்பை, குப்பை மட்டுமே. சுற்றுப்புற பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர், முறைகேடாக, லாரிகள் மூலம் இங்கு கொட்டப்படுகிறது.
ஏரியை காப்பதற்காக, சாலையோரத்தில், தடுப்பு தகடுகள் பாதி துாரத்திற்கு மட்டுமே வைக்கப்பட்டு, 'இங்கு குப்பை கொட்ட கூடாது' என்ற அறிவிப்பு பலகையும்
வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு பலகைக்காகவே, பல்வேறு உணவக கழிவுகளையும், இறைச்சிக் கழிவுகளையும் ஏரிக்குள், பகுதிவாசிகள் கொட்டி வருகின்றனர்.
புழல் ஏரி
மொத்தம், 4,960 ஏக்கர் பரப்பளவு கொண்ட புழல் ஏரி, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரம். பொதுப்பணி துறை நிர்வாகத்தில் உள்ளது.
ஏரியின் முப்புறமும் சுற்றுச்சுவர் ஏதும் இல்லாததால், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது.
புழல் ஏரி நிரம்பும்போது, உபரிநீர் வெளியேறுவதற்காக, இரண்டு ராட்சத மதகு அணைகள் அமைக்கப்பட்டன.
அவை வழியாக வெளியேறும் உபரிநீர், 10 கி.மீ., துாரம், போக்கு கால்வாய் மூலம் பயணித்து, வங்க கடலில் கலக்கும்.
அந்த கால்வாய் நீர், அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கான நிலத்தடிநீர் ஆதாரம்.
ஆனால், தற்போது, ஆகாய தாமரை, பகுதிவாசிகள் கொட்டும் குப்பை மற்றும் புறநகர் பகுதி தொழிற்சாலைகள் வெளியேற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியவற்றால் சிக்கி தவிக்கிறது.
மாதவரம் ரெட்டை ஏரி
மாதவரம் நகராட்சியில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், அமைந்துள்ளது ரெட்டை ஏரி.
மழைக்காலங்களில், அம்பத்துார், அயப்பாக்கம், கொரட்டூர் ஆகிய ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் புத்தகரம், கதிர்வேடு ஊராட்சிகளின் மழைநீர் வடிகால் மூலம், ரெட்டை ஏரிக்கு வருவதால், சுற்றுவட்டார பகுதிகளுக்கான நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது.
ஆனால், இந்த ஏரியின் கரைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. நெடுஞ்சாலையை ஒட்டிய ஏரி பகுதி முழுவதும், குப்பை மேடு தான்.
ஆங்காங்கே, குப்பை எரிந்து, சாலையில் செல்வோருக்கு கண்ணீரை வரவழைக்கிறது.
ஏரியின் பெரும்பகுதி ஆகாய தாமரையின் பிடியில் சிக்கி உள்ளது. ஏரியின், கரையோரம் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் தொழிற்சாலைகளில் இருந்தும், கழிவுநீர் முறைகேடாக ஏரியில் கலக்கப்படுகிறது.
ஏரியின் பரப்பளவை குறைப்பதில், லட்சுமிபுரம், விநாயகபுரம் ஆகிய, ஏரிக்கரையை ஒட்டிய பகுதி ஆக்கிரமிப்பாளர் கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொரட்டூர் ஏரி
பொதுப்பணி துறையின் நிர்வாகத்தில் உள்ள கொரட்டூர் ஏரி, மொத்தம் ௪௭௫ ஏக்கர் பரப்பளவு உள்ளது. ௭௫ ஏக்கர் பரப்பளவிற்கு, கரையோர ஆக்கிரமிப்புகள் உருவாகி உள்ளன.
ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், பொதுப்பணி துறை கால்வாய் வழியாக, புழல் ரெட்டை ஏரிக்கு வந்து சேரும்.
அம்பத்துார் கள்ளிக்குப்பம், சண்முகபுரம், சூரப்பட்டு, மாதானங்குப்பம், தாதங்குப்பம், புழல், மாதவரம் பகுதிகளுக்கு அந்த கால்வாய் நீர் தான் நிலத்தடிநீர் ஆதாரம்.
ஆக்கிரமிப்புகளின் விளைவு, அந்த கால்வாய் இருந்த இடம் புல் முளைத்து போனது. குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அம்பத்துார், பட்டரைவாக்கம், கருக்கு ரயில் பாதையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் மூலம் ஏரிக்குள் விழுகிறது.
என்ன செய்யக்கூடாது?
நாராயணபுரம், கீழ்க்கட்டளை, அரசன்கழனி, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், நன்மங்கலம் உள்ளிட்ட ஏரிகளை சுத்தப்படுத்த, பொதுப்பணி துறையிடம் அனுமதி வாங்கி உள்ளேன். இந்த ஆண்டிற்குள் அவற்றை சுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளேன். என்னுடன், 47 பேர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், மாணவர்கள் தான். யாரிடமும் நான் பண உதவி கேட்டதில்லை. உடலுழைப்பை தான் எதிர்பார்க்கிறேன். இது நமது ஊர். இது சுத்தமாக இருந்தால் நமக்கு தான் பெருமை. இந்த பணியில் சேர வேண்டும் என விரும்புவோர், 99402 03871 என்ற அலைபேசி எண்ணில் அழைக்கலாம். உங்களால் வரமுடியவில்லை என்றால் பரவாயில்லை. ஒரே ஒரு காரியத்தை மட்டும் செய்து விடாதீர்கள். அதுதான், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவது.
அருண் கிருஷ்ணமூர்த்தி,
ஏரிகள் பாதுகாப்பு ஆர்வலர்
என்ன செய்ய வேண்டும்?
ஏரிகள் கண்காணிப்பு, கலெக்டர்களிடம் உள்ளது. அவர்களது பணிச்சுமையால், அதை கவனிக்க முடிவதில்லை. வீட்டுமனை விலை உயர்வால், ஏரி ஆக்கிரமிப்பு, தொழிலாக மாறிவிட்டது; தடுக்க சென்றால் கத்திக்குத்துதான் விழும். ஏரிகளை பராமரித்து தண்ணீரை தேக்கி, அந்த பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யும் நிலை வந்தால், பாதுகாக்கலாம். ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தலைவராக கொண்டு, ஏரிகள் பாதுகாப்பு வாரியம் அமைத்தல்; பறக்கும்படை மூலம் கண்காணித்தல், உள்ளூர் ஆர்வலர்களுக்கு, நீர்நிலை பாதுகாவலர் என, அங்கீகாரம் அளித்தல் போன்றவற்றால், நீர்நிலைகளை பாதுகாக்கலாம். நதிகளை இணைக்கும் முன், ஏரிகள் இணைப்பை செயல்படுத்துவது நல்லது.
எம்.பி.நிர்மல்,
தலைவர், 'எக்ஸ்னோரா'








