சென்னை ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் கடந்த 1994ம்
ஆண்டு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டார். தமிழகத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில்
தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என அதில்
கூறப்பட்டிருந்தது. பதிவாளர் ஜெனரலின் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என
மதுரையைச் சேர்ந்த வக்கீல் சோலை சுப்ரமணியம் ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார். இந்த மனுவை ஐகோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இந்த
உத்தரவை ரத்து செய்து, கீழமை நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள்
எழுத உத்தரவிட வேண்டும் எனக் கோரி வக்கீல் ரத்தினம் என்பவர் சீராய்வு மனு
ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்
கொள்ளப்பட்டது. மனுமீதான விசாரணை நேற்று மீண்டும் நீதிபதிகள் வி.ராமசுப்பிர
மணி யன், வி.எம்.வேலு மணி ஆகியோர் முன் வந்தது.
இருதரப்பு வாதம் முடிந்த நிலையில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழ்
ஆட்சி மொழி சட்டத்தில் 1976ம் ஆண்டு இரு முக்கிய திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டது. �பிரிவு 4 ஏ�வில் உயர்நீதிமன்றத்தின் எல்லைக்கு உட்பட்ட
அனைத்து உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களிலும் சாட்சி விசாரணை
தமிழில்தான் நடத்தப்பட வேண்டும். தீர்ப்புகளும் தமிழில்தான் இருக்கவேண்டும்
எனவும் கூறப்பட்டிருந்தது.
இது அரசியல்
நிர்ணய சட்டத்திற்கு எதிரானது என வக்கீல் ரங்கா என்பவர் உயர்நீதிமன்றத்தில்
தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதன்பின் தமிழை தாய்மொழியாக கொண்டிராத
நீதிபதிகள் தங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் மூத்த நீதிபதிகள் குழு கூடி ஆங்கிலத்திலும் தீர்ப்பு
எழுதலாம் என கூறியது. இது சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. இது ஆட்சி
மொழி சட்டத் திருத்தத்திற்கு எதிரானது.
இதுபோன்ற
சூழ்நிலையில் சில குறிப்பிட்ட காலத்திற்கு நீதிபதிகளுக்கு விலக்கு
அளிக்கலாம். இது நிரந்தரமாக இருக்கமுடியாது. ஆனால் ஆங்கிலத்திலும்
தீர்ப்பளிக்கலாம் என்ற உயர்நீதிமன்ற பதிவாளரின் உத்தரவு நிரந்தரமான ஒன்றாக
உள்ளது. எனவே இதுகுறித்த பதிவாளரின் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
தமிழ் மொழி தெரியாதவர்களை பொறுத்தமட்டில், தமிழ் நாடு சார்நிலை பணியாளர்
நியமன விதிப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும்
தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இவ்வாறு
உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து இனிமேல் கீழ்
நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் நிலை
உருவாகியுள்ளது.







