பி.எட்.
படிப்புக்கான காலத்தை இரு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும்
எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர் கல்வித் துறை
அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.சட்டப்பேரவையில்
வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
பேரவைக் குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பியபோது, தனியார்
பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை
இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும்
விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பி.எட்.
படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. தற்போது, ஓய்வு பெற்ற
நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை
நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு
உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில்
ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும்
கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பி.எட்.
படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர்
கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அது குறித்து எந்த முடிவும்
எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.







