மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையில் தேவையான
மாற்றங்களைக் கொண்டுவந்து, அதை எளிமைப்படுத்துவதற்கு மத்திய அரசு
திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மத்திய சுகாதார
அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியதாவது: மருத்துவத் துறையில், இளநிலை மற்றும்
முதுநிலைப் படிப்பிற்கான இடங்களை அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே, அரசு
மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள்
எளிதாக்கப்படும். அதேசமயம், தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்பட
மாட்டாது.
மேலும், காப்பீட்டு அம்சத்தை உள்ளடக்கிய National Health Assurance
Mission என்ற திட்டமும் விரைவில் தொடங்கப்படும். இத்திட்டத்தின்படி,
வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள மக்களுக்கு, அரசே பிரீமியம் வழங்கும்.
அதேசமயம், வறுமைக் கோட்டிற்கு மேலேயுள்ள மக்கள், குறைந்தளவு பிரீமியம்
திட்டத்துடன் இணைக்கப்படுவார்கள். இதன்படி, அந்த மக்களுக்காக, மருத்துவக்
காப்பீட்டு நிறுவனங்களுடன், அரசு, பேச்சுவார்த்தையில் ஈடுபடும். இவ்வாறு
அவர் கூறினார்.
இந்திய மருத்துவக் கவுன்சிலால் கொண்டு வரப்பட்ட NEET தேர்வை,
உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள போதிலும், அந்த நடைமுறையை மீண்டும் கொண்டு
வருவதில், மத்திய அரசு ஆர்வமாக உள்ளதால், அத்தீர்ப்பை எதிர்த்து,
உச்சநீதிமன்றத்தில், மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.







