மாநிலம் முழுவதும்
உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, புதிய வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள்
மற்றும் தடுப்புசுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 'நபார்டு' வங்கியின் கடனுதவியை பெற, ஓராண்டாக முயற்சித்தது.
தற்போது,
இத்திட்டத்திற்கு, 247 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, 'நபார்டு' வங்கி
ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, நீலகிரி மற்றும்
சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள, 210 அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளது.இதுகுறித்து, பொதுப்பணித்துறை
அதிகாரி ஒருவர் கூறியதாவது:'நபார்டு' வங்கி கடனுதவி மூலம், வேலுார்
மாவட்டத்தில், 34; விழுப்புரம், திருப்பூரில், தலா, 14; திருச்சியில், 13;
திருவள்ளூர், தஞ்சாவூரில், தலா, 12; புதுக்கோட்டையில், 11 பள்ளிகளில்
இப்பணிகள் நடக்க உள்ளன.மற்ற மாவட்டங்களில், ஒன்பதுக்கும் குறைவான
பள்ளிகளில் இப்பணி மேற்கொள்ளப்படும்.
வகுப்பறை
கட்டடங்களுக்கு, 147 கோடி; ஆய்வகங்களுக்கு, 56 கோடி; கழிப்பறைகளுக்கு, 26
கோடி; குடிநீர் திட்டத்திற்கு, இரண்டு கோடி; தடுப்பு சுவர் கட்ட, 16 கோடி
ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.கட்டுமானப் பணிகள் ஒப்பந்த முறையில்
மேற்கொள்ளப்படும். விரைவில், தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு,
கட்டுமானப்பணி துவங்கும்.அடுத்த கல்வி ஆண்டுக்கு முன், இப்பணிகளை முடிக்க
திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.







