நேற்று காட்பாடி காந்திநகரில் உள்ள டீ கடையில் வேலை செய்த சிறுவனை மீட்டு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்தனர். மேலும் இதுபோன்று குழந்தைகளை பணியில் அமர்த்தி வேலை வாங்கி வருவது தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. இதற்கு மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததும் காரணம் என்று கூறப்படுகிறது.
எங்காவது குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால் அதுகுறித்து அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேலூரில் இந்த இலவச தொலைபேசி எண் கடந்த 2 வருடங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் குழந்தை தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சொல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் இலவச தொலைபேசி எண்ணை மீண்டும் உயிர்பெறச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் குழந்தைகளை பணியில் அமர்த்துவதை தடுக்க முடியும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.








