''டிசம்பர் 15ம்
தேதிக்குள், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) மற்றும் குரூப் - 2ஏ தேர்வு
முடிவுகள் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையமான
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழக வனத்துறையில்
காலியாக உள்ள, பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட, இரண்டு உதவி வனப்பாதுகாவலர்
பணியிடத்திற்கான தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று முன்தினம் முதல்
நடத்துகிறது. நேற்று முன்தினம், அனைவருக்கும் பொதுவான தேர்வு
நடத்தப்பட்டது. இதில், 387 பேர் பங்கேற்றனர். சென்னையில், இரண்டு தேர்வு
மையங்களில், விருப்ப பாடங்களுக்கான தேர்வு, நேற்று நடந்தது.
தேர்வு மையத்தை
பார்வையிட்ட, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன்
கூறியதாவது: விண்ணப்பதாரர்கள், பொதுத்தேர்வு மற்றும் இரண்டு விருப்ப பாடம்
எடுத்து, அதிலும் தேர்வு எழுத வேண்டும். விருப்ப பாடத் தேர்வு, வரும், 9ம்
தேதி வரை நடக்கிறது. முதல் நாள் விருப்ப பாடத்தை, 108 பேர் எழுதினர்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் முன், பணியிடங்கள் அதிகரிக்கப்படலாம்
என்பதால், ஆண்களும் இத்தேர்விற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எழுத்து
தேர்வு, நேர்முகத்தேர்வு முடிந்ததும், தகுதியானவர் பட்டியல்
வெளியிடப்படும். ஏற்கனவே முடிந்த, வி.ஏ.ஓ., மற்றும் குரூப் - 2ஏ
தேர்வுகளுக்கான முடிவுகள், டிச., 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். இவ்வாறு,
அவர் தெரிவித்தார்.
குரூப் - 2ஏ தகுதி என்ன?
டி.என்.பி.எஸ்.சி.,
சார்பில் குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் குரூப் -
2ஏ தேர்வு என்பது, நேர்முகத் தேர்வு இல்லாதது. பல்வேறு துறைகளில்
உதவியாளர்கள் மற்றும் அக்கவுன்ட்டன்ட்கள் இதன் மூலம் தேர்வு
செய்யப்படுகின்றனர். இளங்கலை பட்டம் அல்லது பதவிக்கு பொருந்தும்
பட்டப்படிப்பு இப்பணிக்கான தகுதி. இறுதியாக, கடந்த ஜூன், 26ம் தேதி
இத்தேர்வு நடந்தது.







